காவிரியை முழுமையாக பயன்படுத்தி கலக்கும் கர்நாடகா.. கடலில் வீணாக்கும் தமிழகம்!
பெங்களூர்: பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, காவிரி தாய், தமிழகம் நோக்கி பொங்கி ஆரவாரத்தோடு, ஆடி வருகிறாள். இதனால் தமிழகத்தின், மேட்டூர் அணை இன்றே சதம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும், 100 அடியை எட்டும் மேட்டூர் அணை என்பதால், மக்கள் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர். குறிப்பாக, விவசாயிகள்.
இன்று மதியம் நிலவரப்படி, காவிரியின் இரு அணைகளில் இருந்து தமிழகம் நோக்கி, வினாடிக்கு, சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
சவால் ஆரம்பம்
கேஆர்எஸ் அணையில் இருந்து 81,841 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து, 35,000 கன அடி தண்ணீரும், திறந்துவிடப்பட்டு, அவை இணைந்து சுமார், 11,6841 கன அடி என்ற அளவில், தமிழகம் நோக்கி வந்து கொண்டுள்ளன. இது ஒருபக்கம் மகிழ்ச்சி செய்தி என்றபோதிலும், இனிதான் தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் சவாலான கால கட்டம் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் இனியும் கர்நாடகாவை கை காட்டி தப்பிக்க முடியாது.
மேட்டூர் அணை நிரம்பும்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், இதேபோன்ற மழை நீடித்தால், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை இன்னும் சில நாட்களில் நிரம்பிவிடும் வாய்ப்பு உள்ளது. சம்பா சாகுபடிக்காக, வரும் 19ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் உபரி நீரை கர்நாடகா தாராளமாக தமிழகத்திற்கு அனுப்பிவிடும் என்று கருத முடியும்.
தமிழகத்தில் அணை இல்லை
மேட்டூர் அணை நிரம்பினால், அதன்பிறகு தண்ணீரை தேக்கி வைக்க எந்த வசதியும் தமிழகத்தில் இல்லை. எனவே எஞ்சிய நீர் கடலுக்குள் சென்று கலக்கும். கடலில் நதி நீர் போதிய அளவு கலக்க வேண்டும் என்ற அறிவியல் பார்வை ஒரு பக்கம் உள்ளபோதிலும், இம்முறை அது மித மிஞ்சிய அளவுக்கு வீணாகும் என்றே கணிக்கப்படுகிறது. தமிழகத்தின் நிலப்பரப்பை வைத்து பார்த்தால், மேட்டூருக்கு இந்த பக்கம் புதிதாக அணை கட்ட முடியாது என்ற வாதம் உள்ளது.
ஏரி, குளங்களை தூர்வாரவில்லை
அதேநேரம், பெருமளவு நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க, ஏரி, குளங்களை தூர்வாரியிருக்கலாம் என்கிறார்கள் நீர்பாசன வல்லுநர்கள். காவிரி டெல்டா பகுதிகளில் ஏரி, குளங்கள் பல இடங்களில் தூர்வாரப்படவில்லை என்றும், சில இடங்களில் தூர்வாருவதாக கூறிக்கொண்டு, பம்மாத்து காட்டப்பட்டதாகவும் பொறுமுகிறார்கள் விவசாயிகள். இதனால், மேட்டூர் அணையை தாண்டிய தண்ணீரை உரிய வகையில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். கடலில் கலக்கும் தண்ணீரின் அளவை கணக்கெடுத்து, இவ்வளவு நீரை தமிழகம் வீணாக்கியதாக கர்நாடகா, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் வாதிட வசதியாக இருக்கும். இது தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
கர்நாடகா திட்டங்கள்
மற்றொரு பக்கம், கர்நாடகாவோ, முடிந்த அளவுக்கு காவிரி நீரை பயன்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் பங்கை கர்நாடகா தராமல் தனது அணைகளில் சேகரித்து கொண்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒரு சாகுபடி பொய்த்துவிட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பும் தருவாயில்தான் உபரி நீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. இது ஒருபக்கம் என்றால் விவசாய பயிர்களிலும் கர்நாடகா தனக்கே உரிய யுக்திகளை கையாளுகிறது.
கர்நாடகா பயிர் சாகுபடி
மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் போன்ற காவிரி பாசன பகுதிகளில் அதிகப்படியாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கரும்பு பணப்பயிராகும். அதே நேரம், தண்ணீரை மிக அதிக அளவில் உரிஞ்சக்கூடியது. இதனால், காவிரி நீர் அதிகப்படியாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. அணைகள் நிரபி, பயிர்கள் குடித்த எஞ்சிய தண்ணீர்தான் தமிழகம் வரும்.
பெங்களூருக்கு கூடுதல் தண்ணீர்
காவிரிக்கு குறுக்கே கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி என மொத்தம் 4 அணைகளை கட்டி செட்டில் ஆகிவிட்டது கர்நாடகா. இதுதவிர, உச்சநீதிமன்றத்தில் திறம்பட வாதாடி, பெங்களூர் குடிநீர் தேவைக்காக கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீரை பெற்றுவிட்டது கர்நாடகா. பயிர் சாகுபடி, அணைக்கட்டு, பெங்களூருக்கு கூடுதல் தண்ணீர் என, காவிரியை, முடிந்த அளவுக்கு அள்ளி பருகி வருகிறது கர்நாடகா. இதுதவிர, மேகதாது என்ற பகுதியில் புதிதாக அணை கட்டி மின் உற்பத்திக்கும் திட்டமிட்டுள்ளது. ஆக, ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்க மாட்டோம் என கர்நாடகா கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் அதே நேரத்தில், மறுபக்கம், ஏரி, குளங்களை கூட தூர்வாராமல் நாம் தண்ணீரை கடலில் சேர்க்கும் திருப்பணியை செவ்வனே செய்ய உள்ளோம். இம்முறையும்!