அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார் யார்?... ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையில் வாக்குமூலம்
அப்பல்லோவில் சிசிக்சை பெற்ற ஜெயலலிதாவை யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்பது குறித்து ஆறுமுகசாமி கமிஷனில் சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் ஆறுமுகசாமி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களே வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல் நல பாதிப்பு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அவர் கடந்த நவம்பர் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜெயலலிதாவை முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ், கைரேகை பெற்று தந்த மருத்துவர் பாலாஜி ஆகியோர் சந்தித்துள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் செப்டம்பர் முதல்வாரமும், டிசம்பர் 4-ஆம் தேதியும் சந்தித்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.