ஓபிஎஸ் ஆதிக்கத்தால் அதிமுக பொதுச்செயலராக சசிகலா தயக்கம்... மதுசூதனனுக்கு வாய்ப்பு?
ஜெ. வசம் இருந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால் விஷப்பரீட்சையே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் சசிகலா.
அதிமுகவின் 'நிரந்தர' பொதுச்செயலராக வாழும்வரை இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது ஓ பன்னீர்செல்வம், தம்பிதுரை இருவரில் ஒருவரை மத்திய அரசு நியமிக்க சொன்னது.
ஆனால் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சசிகலா தரப்பு இதை விரும்பவில்லை. சசிகலா அல்லது சசிகலா குடும்பத்தினர் அல்லது எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்க விரும்பியது. பின்னர் இறங்கி வந்து ஓ. பன்னீர்செல்வத்தை நியமிக்க ஒப்புக் கொள்ளவும் செய்தது சசிகலா தரப்பு.

சர்ச்சைக்குரிய நடராசன் பேட்டி
ஆட்சிதான் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் போனாலும் கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிரமாக இறங்கியுள்ளது சசிகலா தரப்பு. இதை உறுதிப்படுத்தும்விதமாகத்தான் ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே, அதிமுகவை வீழ்த்த வெளியில் யாருமில்லை; கட்சியை தனிநபர் யாரும் திருட முடியாது என கூறியிருந்தார் சசிகலாவின் கணவர் ம. நடராசன்.

ஆட்சியும் கட்சியும் குறி
சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலராக்குவதன் மூலம் ஆட்சி, கட்சி இரண்டையும் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் சசிகலா கணவர் நடராசன். ஆனால் சசிகலாவோ இதை உடனே செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி வருகிறார்.

களையெடுக்கும் படலம்
அதாவது அதிமுகவில் தனக்கு வேண்டிய பலரையும் மாவட்ட செயலர்கள் உட்பட பல முக்கிய பொறுப்புகளில் போட்டு வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக களையெடுக்க முயற்சித்து வந்தது சசிகலா தரப்பு. ஆனால் அதற்குள் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

ஓபிஎஸ் ஆதிக்கம்
இப்போதைய நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆட்களே அதிகம்.. ஆகையால் பொதுச்செயலராக தம்மை முன்னிறுத்தும்போது பஞ்சாயத்து கிளம்பும் என்கிறாராம் சசிகலா. ஜெயலலிதா மறைந்த உடனேயே கட்சியை உடைத்துவிட்டோம் என்ற நிலைவரக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக அவைத் தலைவராக உள்ள மதுசூதனை அதிமுக பொதுச்செயலராக நியமிக்கலாம் எனவும் யோசனை கூறியுள்ளாராம் சசிகலா. நடராசனும் இதை ஆமோதித்தபடி தம்மை சந்தித்த பிற கட்சித் தலைவர்களிடமும் இத்தகவலைப் பகிர்ந்து வருகிறார்.
சுனாமிக்கு முன் அமைதி!












Click it and Unblock the Notifications