'அம்மா'ன்னா யாரு?... விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவினர் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் அது புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில், தமிழக அரசு சார்பில், சேலம் மாநகராட்சியில், அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வர் படம் ஒட்டப்பட்டுள்ளது. அம்மா என்ற வார்த்தை, முதல்வரை குறிக்கிறது. எனவே, அந்தப் பெயர் மற்றும் முதல்வர் புகைப்படத்தை மறைக்க வேண்டும்.
சேலம் மாநகரில் இயக்கப்படும், அரசு பஸ்களில், இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலில், அதிமுக சின்னம் மற்றும் முதல்வரின் படம் இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் தாலுகா அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் தலைமையில் நடந்தது. ஆளும் கட்சியினர், தேர்தல் நடத்தை விதிகளை, அப்பட்டமாக மீறி வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் தயங்குகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து புகாருக்குள்ளான துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அம்மா என்பது யாரைக் குறிக்கிறது, அதன் விரிவாக்கம் என்ன என்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாம்.