அமைச்சர் முதல் தலைமறைவுவரை... இது செந்தில் பாலாஜியின் கதை
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
சென்னை: ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி இப்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக மாறினார். செந்தில் பாலாஜி நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தற்போது வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி,41. சொந்த ஊர் மண்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டி. பி.காம். பட்டதாரி. மாணவப்பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த செந்தில் பாலாஜி, முதலில் அரசியலில் அடி எடுத்து வைத்தது மதிமுகவில்தான். பின்னர் திமுகவிற்கு சென்று அங்கிருந்து அதிமுகவிற்கு தாவினார்.
மோசடி வழக்கில் தேடப்படுவதால் தற்போது தலைமறைவாக இருக்கிறார். செந்தில் பாலாஜி கடந்து வந்த பயணத்தை அறிந்து கொள்வோம்.
முதன்முறை எம்எல்ஏ
கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர், மாவட்ட மாணவர் அணி செயலாளர், ஜெ பேரவை செயலாளர், மாணவர் அணி இணைச் செயலாளர், கிளைகழகத் தலைவர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.1996, 2001 ஆம் ஆண்டுகளில் இருமுறை கரூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
அமைச்சர் பதவி பறிப்பு
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றபோது கோயில்களில் வழிபாடு நடத்தி மொட்டை போட்டு கட்சியின் விசுவாசியாக இருந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இவரது அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் திடீரென்று பறிக்கப்பட்டது அதன் பிறகு கரூரில் நடந்த பல்வேறு கூட்டங்களில் சரிவர கலந்து கொள்ளாமல் இருந்தார்.
தேர்தல் ரத்து
இந்நிலையில் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் கடந்த சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார். பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ரத்தானது. இதனையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
அரவக்குறிச்சி எம்எல்ஏ
ஆனால் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதிய வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று நினைத்த சசிகலா, தனது ஆதரவாளரான செந்தில் பாலாஜி போட்டியிட வாய்ப்பு அளித்தார். அரவக்குறிச்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக பதவியேற்றார்.
எடப்பாடிக்கு எதிர்ப்பு
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் சசிகலா அணியில் இருந்தார் செந்தில் பாலாஜி. எனினும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பாகவே பேசி வந்தார். ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமும் அறிவித்தார்.
பணமோசடி வழக்கு
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பின்னர் டிவி தினகரன் அணியில் இணைந்தார் செந்தில் பாலாஜி. புதுச்சேரி ரிசார்ட்ஸ் மற்றும் குடகு ரிசார்ட்ஸ்சில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு பாய்ந்தது.
வருமான வரி சோதனை
இதனையடுத்து செந்தில் பாலாஜி தலைமறைவானார். எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கோரியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.