மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பது ஏன்?... விளக்கிய தம்பித்துரை
தமிழக நலனுக்காகவே மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பதாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானதை கேட்டு பெறுகிறோம், மத்திய அமைச்சர்களை, தமிழக அமைச்சர்கள் சந்திப்பதில் அரசியல் எதுமில்லை என்று கூறியுள்ளார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை.
இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு, பொதுச்செயலாளர் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
கடந்த 28ஆம் தேதி நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அதிமுக பொதுக்குழு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பயணம்
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்றும், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் என்றும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற அமைச்சர்களும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் டெல்லி சென்றனர்.
தினகரன் அணி மனு
ஆனால், இவர்களுக்கு முன்பாகவே தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தங்களிடம் கருத்து கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்தனர்.
அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
டெல்லியில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மைத்ரேயன் எம்.பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
அரசியல் கிடையாது
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அருண் ஜெட்லியுடனான இந்தச் சந்திப்பில் அரசியல் இல்லை. சந்திப்பின்போது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்தும் தமிழக நலன் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. தமிழகத்துக்கு வர வேண்டிய 17 ஆயிரம் கோடி நிதி தொடர்பாக அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கட்டுப்படுத்த முடியாது
எந்தக் கட்சியும் மற்ற கட்சியைக் கட்டுப்படுத்த இயலாது. அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். செப்டம்பர் 12 கூடவுள்ள பொதுக்குழு, செயற்குழு முறைப்படிதான் கூடுகிறது என்றார்.
ராஜ்நாத்சிங் உடன் சந்திப்பு
இன்று காலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்பி.மைத்ரேயன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியுள்ளார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை
அரசியல் பேசவில்லை
மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில அரசியல் பேசவில்லை. தமிழக நலனுக்காகவே சந்தித்து பேசுகிறோம். மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லை என்றார்.
நீட் விவகாரம்
மாநில அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை என்ற குறை இனி தீரும் என்றும் கூறினார். நீட் விவகாரத்தில் மத்திய அரசு உதவியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக இருந்துள்ளது
Recommended Video
கருத்து வேறுபாடு சரியாகும்
அதிமுகவில் அனைவரும் ஒன்றாகவே இருக்கின்றனர், கருத்து வேறுபாடு விரைவில் சரியாகும். அதிமுகவில் பிளவு கிடையாது இரட்டை இலை அதிமுகவிற்கு சொந்தமானது. இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அது விரைவில் சரியாகும். ஆட்சியை கலைக்க வேண்டும என்று யாரும் நினைக்கவில்லை.