கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியை, அமித்ஷா திடீரென தவிர்க்க காரணம் என்ன?
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின், தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது வருகையை ரத்து செய்துள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்பி, கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு ஆகியோர் நேரடியாக அமித் ஷாவை சந்தித்து நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பிதழ் அழைத்திருந்தனர்.
பாஜக திமுக கூட்டணி யூகங்கள்
இதையடுத்து அவரும் சென்னை வருவதற்கு முடிவு செய்திருந்தார். இது குறித்த தகவல்கள் வெளியானதும், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியுடன், திமுக செல்லத் தொடங்கியுள்ளது என்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து பரவத் தொடங்கியது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார். திடீரென அமித்ஷா, தனது வருகையை ரத்து செய்து முடிவெடுக்க என்ன காரணம் என்ற விவாதங்கள் இப்பொழுது கிளம்பியுள்ளன.
பாஜக நினைப்பது என்ன
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் இதுதான்: தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியாக திமுகவைதான், பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. எனவே எப்படியாவது திமுகவுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் வலுவாக காலூன்ற முடியும் என்பது மேலிடத் தலைவர்களின் உறுதியான எண்ணம். இதையடுத்துதான், டெல்லியில் உள்ள திமுக முகங்களுடன், பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மூலமாக லாபி செய்து பாசிட்டிவ் பதிலை வாங்க திட்டமிட்டனர்.
திமுக உறுதி
ஆனால், திமுகவோ, பாரதிய ஜனதா எதிர்ப்பு என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்கிறோமோ இல்லையோ, ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதில் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார். ஏனெனில் திமுகவைப் பொறுத்த அளவில் சிறுபான்மையினர் வாக்குகள் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. அந்த வாக்கு வங்கியை இழக்க ஸ்டாலின் விரும்பவில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு அலை உள்ளிட்டவற்றை கவனித்து வரும் ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
மோடி எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க சென்னை வந்திருந்தபோது, கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை முன்னெடுத்தது திமுக. ஹெலிகாப்டரில் சென்ற மோடியை கூட விடாமல் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கூட மோடிக்கு எதிர்ப்பு காட்டியது திமுக. இருப்பினும் கூட கருணாநிதி மறைவுக்கு நேரடியாக பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். அதேபோல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு முன்பு, உறுப்பினராக இல்லாத கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு புது வரலாறு படைக்கப் பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் திமுகவைப் பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் (சுப்புலட்சுமி ஜெகதீசன்) பகிரங்கமாக பேசினார். இதை பாரதிய ஜனதா கட்சி தலைமை ரசிக்கவில்லை.
இறங்கி வந்த பாஜக
தமிழக பாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் கூட மோடி, இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டும், திமுக, பாரதிய ஜனதா கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல என்று விமர்சனம் செய்திருந்தனர். இந்த நிலையில்தான் என்னதான் முயற்சி செய்தாலும் பாஜகவை, திமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே கிடையாது என்ற தகவல் பாஜக மேலிடத்திற்கு சென்றுள்ளது. கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றாலும், எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மாறாக, பாஜகவிற்குள் உள்ள இந்துத்துவா பிரிவினர்தான் கோபப்படுவார்கள். அதற்கு ஒரு உதாரணம், சுப்பிரமணிய சுவாமியின் ட்வீட். அமித்ஷா, கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்கபோவதில்லை என தகவல் வந்துள்ளதாக முதலில் ட்வீட் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியவர் அவர்.
அமித்ஷா திட்டம்
சுப்பிரமணிய சுவாமி மட்டுமல்ல, பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள வட இந்திய இந்துத்துவா பிரிவினர், அமித்ஷா கருணாநிதி நினைவேந்தலுக்கு செல்வதை விரும்பவில்லை. வட இந்தியாவிலுள்ள பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களை பொறுத்தளவில், கருணாநிதி என்பவர் இந்து மதத்திற்கு எதிரானவர், ராமர்சேது விவகாரத்தில் ராமரை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவரா என கேள்வி எழுப்பியவர் என்பதுதான் மனதில் பதிந்துள்ளது. அப்படியிருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்ச்சியில், கருணாநிதியை அமித்ஷா புகழ்ந்து பேசுவது பாஜக ஆதரவாளர்களைத்தான் எரிச்சல்படுத்தும். எனவே பாஜகவின் வாக்கு வங்கியை பகைத்துக்கொண்டு, பலனும் கிடைக்காமல் ரிஸ்க் எடுக்க அமித்ஷா விரும்பவில்லையாம். எனவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கருணாநிதி நினைவேந்தலில் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் நம்மிடம் தெரிவித்தார்.