ஜெயானந்துக்கு அதிமுக பதவி கிடைக்காத அதிருப்தியால் சசிகலாவை சந்திக்கவில்லையா திவாகரன்?
ஜெயானந்துக்கு அதிமுகவில் பதவி எதுவும் தராத அதிருப்தியில்தான் சசிகலாவை திவாகரன் சந்திக்கவில்லையா? என்பதுதான் அதிமுகவின் ஹாட் டாபிக்.
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவை ஒருமுறைகூட திவாகரன் சந்தித்துப் பேசவில்லை. இதன் பின்னணி குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு சிறையில் இருந்து தி.நகர் வரும் வரையில் தினகரனும் டாக்டர் வெங்கடேஷ் மட்டுமே சசிகலாவுடன் உடனிருந்தனர். குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனை, பலமுறை சந்தித்துப் பேசினார் திவாகரன். ஆனால் சசிகலாவை சந்திக்க மறுப்பதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதியான பிறகு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார் சசிகலா. இதன்பிறகு மன்னார்குடி உறவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தி வந்தார் தினகரன்.

தினகரன் - திவாகரன் மல்லுக்கட்டு
சசிகலா குடும்பத்தில் யாருக்கும் பதவி இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறினார் தினகரன். இதனால், திவாகரனின் கோபத்துக்கும் அவர் ஆளானார். தினகரனுடன் சேர்ந்து கொண்டு ஜெயா டி.வி நிர்வாகி விவேக் செயல்படும் விதத்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் தொடங்கி தினகரனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உறவினர்களே விமர்சித்தனர்.

சசிகலா எழுதிய கடிதம்
எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகே, சசிகலா குடும்பத்தினர் மனதில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு சிறையில் இருந்து சசிகலா எழுதிய கடிதம் ஒரு காரணமாக அமைந்தது. நமது குடும்பத்தில் ஒற்றுமை இருந்தால்தான் அனைத்தும் நம்மைத் தேடி வரும். நாம் அடித்துக் கொண்டிருப்பதால் எதிரிகள் பலம் பெற்றுவிடுவார்கள் என அதில் சசிகலா குறிப்பிட்டிருந்தார். இதன்பிறகு, சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமியின் துக்க சடங்கில் தினகரனும் திவாகரனும் ஒன்று சேர்ந்தனர்.

அரசியலில் ஜெயானந்த்
இதன்பிறகு, தினகரன் நடத்திய தஞ்சை பொதுக்கூட்டத்திலும் திவாகரன் மகன் ஜெயானந்தை முன்னிறுத்தினார். ஆனாலும், அ.தி.மு.கவில் ஜெயானந்த்துக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால், திவாகரன் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னரே, கட்சியின் இளைஞர் பாசறையில் ஜெயானந்த்துக்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சிறையில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், அப்படி எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

சசிகலா மவுனத்தால் அதிருப்தி
எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தார் ஜெயானந்த். சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களில் அதிரடியான கருத்துக்களைக் கூறிவருவதால், புதிய பதவி தேடி வரும் என்ற பேச்சு உருவானது. ஆனால் சசிகலாவின் தொடர் மவுனம் திவாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்கின்றனர்.

திவாகரன் உதவிகள்
மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாக குளோபல் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தார் திவாகரன். சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதித்து வந்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடியும் வரையில் உடனிருந்தார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.

சசி மீது அதிருப்தி இல்லை?
சசிகலா மீதான அதிருப்தியின் காரணமாகத்தான் அவர் வரவில்லை என்கிறார் திவாகரன் ஆதரவு பிரமுகர் ஒருவர். இதுகுறித்து திவாகரன் தரப்பிடம் பேசினோம். அவர்களோ, சசிகலா மீது எந்தக் கோபமும் இல்லை; நடராஜனுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவால், அவர் மிகுந்த வேதனையில் இருக்கிறார். தங்களால் வளர்ந்தவர்கள் செய்யும் துரோகங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த ஐந்து நாட்களும் மௌனமாக இருப்பதைத்தான் சசிகலா விரும்பினார். தவிர, கடுமையான காய்ச்சல் காரணமாக தீவிர ஓய்வில் இருக்கிறார் திவாகரன். இதை உணர்ந்து சசிகலாவும், உடம்பைப் பார்த்துக் கொள் எனக் கூறிவிட்டார். வேறு எந்தக் காரணங்களும் இல்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications