திமுகவுடன் போகலாம்தான் நாங்களும்தான் விஜயகாந்திடம் சொன்னோம்... ஆனால்... போட்டுடைக்கும் "பார்த்தா"
கன்னியாகுமரி: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்குப் போவோம் என்றுதான் நாங்கள் விஜயகாந்திடம் சொன்னோம்; ஆனால் முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்ததால் மக்கள் நலக் கூட்டணிக்கு போனோம் என்று தேமுதிகவின் மாஜி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பார்த்தசாரதி பேசியதாவது:
தமிழ்நாட்டில் தொண்டர்கள் உண்மையாக இருக்கிற ஒரே கட்சி தேமுதிக தான். திராவிட கட்சிகளே பயந்து ஒதுங்கிய இடைத் தேர்தலை சந்தித்தவர்கள் நாம்.
மண்டபத்தை இடித்த திமுக
திமுகவும்.அதிமுகவும் நமக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும். கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். கேப்டன் வீட்டில் வருமானவரி துறை ரெய்ட் நடத்தினார்கள்.
அதிமுகவுக்காக உழைத்தோம்
2011 ல் தொண்டர்களின் கருத்தை கேட்டு கேப்டனை அழிக்க நினைத்த திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைத்தோம். அந்த கூட்டணியில் 234 தொகுதியிலும் சூறாவளியாகச் சுழன்று பிரசாரம் செய்த ஒரு நபர் நம்ம கேப்டன் தான்.
திமுகவுக்கு போகலாம்னு சொன்னோம்
ஜெயலலிதாவைக் கண்டு எல்லோரும் பயப்படும் வேளையில் பயப்படாத ஒரு தலைவர் கேப்டன். இந்த தேர்தலில் நாங்கள் எல்லோரும் திமுக கூட்டணிக்குப் போகலாம் என கேப்டனிடம் சொல்லியிருந்தோம். ஆனால் மக்கள் நலக் கூட்டணி கேப்டனை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து அழைத்தது.
முரசு சின்னத்தில் போட்டி
மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நாம் முரசு சின்னத்திலே தான் போட்டியிட போகிறோம். தேர்தலில் செலவுக்கு பணம் இல்லை என்று யாரும் நகைகளையோ ,நிலங்களையோ விற்க கூடாது என்று கேப்டன் கண்டிப்பாக சொல்லியிருக்கிறார். இருப்பதை வைத்துக் கொண்டு கேப்டன் பெயரை சொல்லி ஓட்டு கேட்போம்.
இவ்வாறு பார்த்தசாரதி பேசினார்.