4 ஆண்டுகளாக ஒரே 'இலாகா' , சி.எம்.வாய்ப்பு.. செந்தில் பாலாஜி தடாலடியாக உருண்டதற்கு காரணம் தம்பி?
சென்னை: தமிழக அமைச்சரவையில் 4 ஆண்டுகாலமாக இலாகா மாற்றத்துக்குள்ளாகாமல் இருந்தவர்.. முதலமைச்சர் பெயர் பட்டியலிலும் இடம்பிடித்தவர்.. என எல்லாவற்றில் ஏற்றம் கண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக தலைமைக்கு வேண்டப்படாதவராக மாறிப் போனதற்கு அவரது தம்பியின் அட்டகாசங்களே காரணம் என்கின்றன கரூர் வட்டாரங்கள்.
கரூர் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்தது. அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரையில் சின்னசாமி மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். அவர் மூலம் அண்ணா திமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி.
அக்கட்சியின் மாவட்ட மாணவர் அணி செயலராகி மெல்ல மெல்ல மாவட்ட செயலாளர் பதவியை எட்டிப் பிடித்தார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக ஜெயித்து போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் உயர்ந்தார் செந்தில் பாலாஜி.
குடும்ப ஆதிக்கம்
மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவி என அடுத்தடுத்து அதிரடியாக செந்தில் பாலாஜி முன்னேற்றம் கண்டவுடன் அதிமுக நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு தமது குடும்பத்தினரை வளையமாக்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி என்பது நீண்டகால புகார்.
கரூர் ராமஜெயம்
குறிப்பாக ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தை செந்தில் பாலாஜியின் தம்பி 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்ததை அப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.. அதாவது திருச்சியில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த நேருவுக்கு அவர் தம்பி ராமஜெயம் எப்படியோ அதுபோல் செந்தில் பாலாஜிக்கு 'தம்பி' குறுநிலமன்னராக கோலோச்சி வந்தார்.. இதனால்தான் "கரூர் ராமஜெயம்" என்ற செல்லப் பெயரும் அந்த தம்பிக்கு உண்டு.
நில அபகரிப்பு, ஆள் கடத்தல்
இந்த தம்பி மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு புகார்கள் விஸ்வரூபமெடுத்து நீதிமன்றம் வரை போயுள்ளது.. ஆனால் அசராத செந்தில் பாலாஜி அண்ட் குடும்பம் தங்களது 'வேட்டையை' தொடர்ந்தது.
இது கரூர் அண்ணா தி.மு.க. நிர்வாகளிடையே மிகக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின் போதே இந்த விவகாரம் எதிரொலித்தது. அதேபோல் அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வான கரூர் கே.சி. பழனிச்சாமியுடன் சில வியாபார டீலிங்குகளையும் செந்தில் பாலாஜி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
நிலைத்தது ஏன்?
ஆனாலும் அதிமுகவில் செல்வாக்கு மிக்க 'ஜூனியர் அரசி'யின் நம்பிக்கையைப் பெற்ற காரணத்தாலேயே கடந்த 4 ஆண்டுகாலமாக எத்தனையோ அமைச்சரவை மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் நிகழ்ந்த போதும் 'குத்துக் கல்லாக' செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் ஒட்டியே இருந்தார்.
சி.எம். வாய்ப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்டிருந்தது. அப்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என பெரும் பட்டிமன்றமே நடந்தது.. அதில் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டது.. இதற்கு காரணமே போயஸ் தோட்டத்து 'செல்வாக்கு சீமாட்டிதான்' காரணம் எனவும் தகவல்கள் கசிந்தன..
மெட்ரோ ரயில்?
மேலும் செந்தில் பாலாஜி மீது பேருந்துகளுக்கு ஜி.எஸ்.பி. கருவிகளை வாங்கியதில் முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பில் 'உள்குத்து' செய்ததால் தோட்டத்தால் 'ஊமைக் காயம்' அடைந்தார் செந்தில் பாலாஜி எனவும் தகவல்கள் உண்டு....
இப்படி செந்தில் பாலாஜி மீதும் அவரது தம்பி "கரூர் ராமஜெயம்" மீதும் மலையென குவிந்த அதிருப்தியால்தான் தற்போது 'ப்ப்ப்ப்பூ'வென அமைச்சர் பதவி, கட்சிப் பதவியில் இருந்து வீசி எறியப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்கின்றன கரூர் வட்டாரங்கள்...