சசிகலாவுக்கு எதிராக திடீரென சசிகலா புஷ்பா வழக்கு போட்டதன் பரபர பின்னணி!
சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராவதை எதிர்த்து சசிகலா புஷ்பா திடீரென வழக்கு போட்டதின் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: சசிகலா நடராஜனுக்கு எதிராக சசிகலா புஷ்பா திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டதன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. இருந்தபோதும் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்; அதிமுக எம்பியாக அங்கீகரிக்க வேண்டாம் என ராஜ்யசபா தலைவருக்கு அதிமுக சார்பில் கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை.
இதனால் ராஜ்யசபாவில் அதிமுக எம்பியாகவே இருந்து வருகிறார் சசிகலா புஷ்பா. அவர் தொடர்ந்து சசிகலா நடராஜன் தரப்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கும் சசிகலா நடராஜன் தரப்பே காரணம் என கூறி வருகிறார்.
காத்திருந்த சசிகலா புஷ்பா
தற்போது அதிமுக பொதுச்செயலராக சசிகலா முயற்சித்து வருகிறார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென வழக்குப் போட்டுள்ளார் சசிகலா புஷ்பா. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வழக்கு போடலாம் என காத்திருந்தாராம் சசிகலா புஷ்பா.
பாஜக மேலிடம்
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு டெல்லி பாஜக மேலிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது சசிகலா நடராஜனின் மூவ்களை விவரித்துவிட்டு வழக்கு போட காத்திருக்கிறேன் என கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா. ஆனால் அவரிடம் பேசிய டெல்லி பாஜக மேலிடத் தலைவரோ, சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டால் அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போது வழக்குப் போட்டு நீங்கள் உத்தரவு ஏதும் வாங்குவதற்குள் தேர்தல் ஆணையம் சசிகலாவை பொதுச்செயலராக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
தடுக்க முடியும்
அதனால் இப்போதே வழக்குப் போட்டுவிடுங்கள்.. அப்படி வழக்குப் போட்டுவிட்டால் இதை காரணம் காட்டி சசிகலா நடராஜனுக்கு தேர்தல் ஆணையத்திடம் 'செக்' வைக்கும் வாய்ப்பு உருவாகும் என கூறியுள்ளார். இந்த ஆலோசனையின் பேரில்தான் உடனே சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினாராம் சசிகலா புஷ்பா.
அடுத்தடுத்த வியூகங்கள்
சசிகலா புஷ்பாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது டெல்லி பாஜக மேலிடம். அவர் மூலமாகவே அடுத்தடுத்து சசிகலா நடராஜனுக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகங்களுடன் காத்திருக்கிறார்களாம்!