விஜய்க்கு மட்டும் கருத்து சுதந்திரம் இருக்க கூடாதா? #Mersal
சென்னை: திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்திற்காக பாஜக தலைவர் தமிழிசை, நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த காட்சிகளை படத்தில் இருந்தே நீக்கியாக வேண்டும் என்கிறார் தமிழிசை. பாஜக தலைமையை குளிர்விக்கவே இப்படி அவர் கோரிக்கைவிடுத்திருக்க கூடும். ஆனால் பாஜக ஏன் திரைப்பட டயலாக்கை பார்த்து அஞ்ச வேண்டும்?
சென்சார் அனுமதி வாங்கியாச்சு
முதலில், தமிழிசை எந்த அடிப்படையில் இப்படியான கோரிக்கையை வைக்கிறார்? இந்த திரைப்படம் முறையாக தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்தே தணிக்கை குழு, அனுமதியளிக்கும். தமிழிசை 'சூப்பர் சென்சார்' போல செயல்படுவது தவறான முன் உதாரணங்களை ஏற்படுத்தும். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தபோது, பாஜக ஆதரவாளர்கள் இதே லாஜிக்கைதான் முன் வைத்தனர் என்பதை தமிழிசை இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும்.
திரைப்படம் பேசக்கூடாதா
மற்றொரு விஷயமாக கவனிக்க வேண்டியது திரைப்படங்கள் மீதான அரசியல் பார்வை. திரைப்படங்களில் அரசியல் பேசக்கூடாது என்ற விதிமுறை ஏதும் உள்ளதா? இதற்கு முன்பு பல திரைப்படங்கள் நடப்பு அரசியலை தெறிக்கும் வசனங்களோடு பேசியவைதானே. சத்யராஜ், விஜயகாந்த் போன்றோர் நடித்த பல படங்களையும், அதற்கு முன்பே எம்.ஆர்.ராதா நடித்த படங்களையும் கூட உதாரணமாக காண்பிக்க முடியும்.
கலையை கட்டுப்படுத்தலாமா?
தினமும் நாட்டின் முன்னணி நாளிதழ்களில் வெளியாகும் கார்ட்டூன் போன்றவைதான் திரைப்படங்களில் பேசப்படும் சமகால அரசியலும். கார்ட்டூன்களை எதிர்க்காதவர்கள், திரைப்பட நடிகர்களை மட்டும் எதிர்ப்பது ஏன்? திரைப்படமும் ஒரு கலைவடிவமே எனும்போது, அதை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகள் எப்படி ஒரு ஜனநாயக நாட்டில் எடுத்துக்கொள்ள முடியும்?
சகிப்புத்தன்மை
பாஜகவின் சகிப்புத்தன்மை தமிழிசை பேட்டியால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2ஜி பற்றி கத்தி படத்தில் விஜய் பேசியதை கண்டுகொள்ளாமல் கடந்தது காங்கிரசும், திமுகவும். ஆனால், தமிழிசை மெர்சல் பிரச்சினையை பேசியதன் மூலம், இதைக்கூட சகிப்புத்தன்மையோடு கடந்து செல்ல முடியாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
ஜனநாயகத்திற்கு அழகா?
கருத்தை வெளிப்படுத்தும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உண்டு. அதை எதிர்கொள்வதுதான் ஆள்வோருக்கு அழகு. விமர்சனங்களில் தப்பு இருந்தால், அதற்கு விளக்கம் அளிக்கலாமே தவிர, விமர்சனமே இருக்க கூடாது, விமர்சன காட்சியே படத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்கப்படாது.