ஒரே இரவில் கூண்டோடு அதிமுக அமைச்சர்கள் எடப்பாடி கோஷ்டியில் தஞ்சம் அடைந்தது இந்த பீதியில்தான்!
ஒரே இரவில் அத்தனை அமைச்சர்களும் தினகரனை தூக்கிப் போட காரணமே 'ரெய்டு' 'கைது' பீதிதானாம்.
சென்னை: தினகரன் கோஷ்டியில் இருந்த அமைச்சர்கள் கூட ஒரே இரவில் எடப்பாடி கோஷ்டிக்கு தாவியதன் பின்னணியில் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கையை பாயவிடுமோ என்கிற பீதிதான் காரணமாம்.
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்க இருக்கின்றன. தினகரனை ஒதுக்கும் முடிவை இவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியும் என அமைச்சர்களே எதிர்பார்க்கவில்லை.
டெல்லியில் இருந்து கிடைத்த கிளியரன்ஸ்தான் அமைச்சர்களின் அதிரடி முடிவுக்குக் காரணம் என்கின்றன ஆளும்கட்சி வட்டாரங்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட கொங்கு மண்டல அமைச்சர்கள் அனைவரும் தினகரனுக்கு எதிராக ஓரணியில் திரண்டாலும், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு அமைச்சர்களும் மௌனமாக இருந்ததைக் கண்டுதான், விலகல் முடிவை அறிவித்தார் தினகரன்.
கூவத்தூர் ஜெயக்குமார்
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைக்கப்பட்டது முதல் ஆர்.கே.நகர் தேர்தல் களம் வரையில் தினகரனுக்கு ஆதரவாக ஆக்டிவ்வாக வலம் வந்தவர் நிதி அமைச்சர் ஜெயக்குமார். கூவத்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அவருக்கு நிதி அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பையும் வழங்கினார் சசிகலா.
அதிர்ச்சி தந்த ஜெயக்குமார்
சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயக்குமார் நடத்திய பிரஸ்மீட்டையும் தினகரன் எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் ஆட்சியை அடுத்த நான்கு ஆண்டுகள் மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமும் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அனைவருமே கலந்து ஒருமித்த கருத்தை எட்டியிருக்கிறோம். கட்சி மற்றும் ஆட்சியில் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு வழிநடத்த வேண்டும் என்பதே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்' எனப் பேசியிருந்தார் ஜெயக்குமார்.
விஜயபாஸ்கர்
"கடந்த 100 நாட்களாக தினகரன் தலையீடு பற்றித் தெரியாமலா ஜெயக்குமார் இருந்தார். திடீரென அவர் இவ்வாறு கிளம்புவதற்குக் காரணமே பயம்தான். கூவத்தூர், கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு அரணாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜயபாஸ்கர். மற்றொருவர் அமைச்சர் ஜெயக்குமார். அடியாட்கள், மதுபானம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை விஜயபாஸ்கர் பார்த்துக் கொண்டார்.
ஆர்கே நகர் தேர்தல்
'யாருக்கு என்ன தேவை?' என்பதைக் கணித்து, அவர்களை சசிகலா பக்கம் கொண்டு வரும் வேலையைத் திறம்பட செய்தார் ஜெயக்குமார். ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் இருந்தவர்களையும் சரிக்கட்டினார். இதன்பிறகு தினகரனோடு நெருக்கமாக வலம் வந்தார். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 'நான் போட்டியிடுகிறேன்' என அறிவித்தார் தினகரன். அ.தி.மு.கவின் அமைச்சர்கள் பலருக்கும் வார்டுகளைப் பிரித்துக் கொடுத்தார் தினகரன்.
பணப்பட்டுவாடா
ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டில் 33 பூத்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவருக்குக்கீழ் ஓ.எஸ்.மணியன், முக்கூர் சுப்ரமணியன், கோகுல இந்திரா உள்பட பெரும்படையே களம் இறக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு எந்தெந்த வகையில் விநியோகிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்தார்.
ரெய்டால் அதிர்ச்சி
இதற்கிடையில், வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்து ஆவணங்களைக் கைப்பற்றியதால், பதற்றத்துக்கு ஆளாகிவிட்டார். இதுபற்றி எங்களிடம் பேசியவர், ' அடுத்த டார்கெட் நான்தான். என்னை நோக்கித்தான் வருவார்கள்' எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் ஜெயக்குமார். அதற்கேற்ப, ஏழு அமைச்சர்களை நோக்கி ஐ.டி ரெய்டு நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
நடவடிக்கைக்கு அஞ்சி..
இந்தநேரத்தில்,'நமக்கு வேறு வழியில்லை. இணைப்பு வேலைகளில் இறங்கினால், எந்த நடவடிக்கையும் நம்மீது வரப் போவதில்லை' என முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றது. ஆளும்கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் இதே தகவல்தான் சொல்லப்பட்டது. 'கூவத்தூரில் 5 கோடி ரூபாய் பணம் வாங்கியது முதல் தற்போது வரையிலான அனைத்து சொத்து ஆதாரங்களையும் சேகரித்துவிட்டார்கள். என்னுடைய முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை' என எடப்பாடி தரப்பு கறாராகக் கூற, அவர்களும் சரண்டர் முடிவுக்கு வந்தார்கள். விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு என யாரெல்லாம் தினகரனுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என தினகரன் நம்பினாரோ, அவர்களும் எடப்பாடி பக்கம் வந்த கதை இதுதான்" என்றார் விரிவாக.
தம்பிதுரை பாலம்...
"ஒட்டுமொத்தமாக இணைப்பு நடவடிக்கைக்கும் பாலமாக இருந்தது தம்பிதுரைதான். பன்னீர்செல்வத்தைவிடவும் பலம் வாய்ந்த இடத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனவே, 'முதல்வர் நாற்காலியில் இருந்து எடப்பாடி நகர மாட்டார்' என தெளிவாகக் கூறிவிட்டார் தம்பிதுரை. இதற்கு டெல்லியில் இருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. இதனால், பன்னீர்செல்வம் தரப்பினர் கூடுதல் டென்ஷனில் இருக்கிறார்கள். ' கட்சியை வழிநடத்த குழு அமைப்போம். அமைச்சரவை அப்படியே தொடரட்டும்' என்பதுதான் கொங்கு மண்டலத்தின் கணக்கு. இந்தக் கணக்குகளை நீர்த்துப் போகச் செய்தால், ஆட்சி முடிவுக்கு வருவதையும் தவிர்க்க முடியாது" என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.