தென்னகத்தின் கும்பமேளா.... மகாமகம் குளத்தில் நீராட கும்பகோணம் வருவாரா ஜெயலலிதா?
சென்னை: சென்னை: கும்பகோணத்தில் 'தென்னகத்தின் கும்பமேளா' என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மகாமகம் பெருவிழா கும்பகோணத்தில் களை கட்டியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்திற்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடைபெறும் நாளும் அவரது பிறந்த நட்சத்திர நாளேயாகும்.
முதல் முறை ஜெயலலிதா முதல்வரான பிறகு 1992ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகப் பெருவிழாவில் பங்கேற்றார். அதன்பின் 2004ம் ஆண்டு மகாமகத்தின்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தார். தற்போது 2016ம் ஆண்டு நடைபெறும் மகாமகத்தின் போதும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே உள்ளார்.
6வது மகாமகம்
முதல்வர் ஜெயலலிதா பிறந்த பிறகு நடைபெறும் 6வது மகாமகம் இது. இதில் 1992, 2004, 2016 ஆகிய 3 மகாமகங்களின்போது அவரே தமிழக முதல்வர். தமிழக முதல்வர்களில் 3 மகாமகங்களின் போது முதல்வராக இருந்த சிறப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
1992ல் 50 பேர் பலி
ஜெயலலிதா முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 1992-ம் ஆண்டு மகாமகம் நடந்தது.
அப்போது நடந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக
50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தார்கள். அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திய சம்பவம் அது.
2004 மகாமகம்
அதனாலேயே 2004ம் ஆண்டு மகாமகம் நடந்த போது ஜெயலலிதா அங்கு போகவில்லை. ஒரே நாளில் இருந்த மகாமகக் குளியலை, கொடியேற்றத்தில் இருந்து 10 நாட்கள் வரை குளிக்கலாம் என்று மாற்றி நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
2016 மகாமகம்
இந்த ஆண்டு மகாமகம் பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 5 நாட்களில் இதுவரை 11 லட்சம் பக்தர்கள் வரை புனித நீராடியுள்ளனர். 22ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் மட்டுமின்றி பொற்றாமரை குளம், காவிரிஆறு ஆகிய இடங்களிலும் புனித நீராடல் நடைபெறும்.
4 ஹெலிபேடுகள்
இந்த பெருவிழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு ஏதுவாக கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 4 ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் இறங்குவதற்கு வசதியாக 4 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அவ்வப்போது வருவாய்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்கள் வருகை?
மத்திய, மாநில அமைச்சர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருகையை கருத்தில் கொண்டு ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டாலும், மகாமக விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வரலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா வருவாரா?
கடந்த 1992 மகாமகத்திற்கு ஜெயலலிதா வருகை தந்தார். 2004 மகாமகத்திற்கு வரவில்லை. ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளதால் இந்த விழாவுக்கு ஜெயலலிதா வருவாரா என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
தேர்தல்களில் தோல்வி
இதனிடையே 1992, 2004 மகாமகம் நடைபெற்ற பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது, ஜெயலலிதா முதல்வர் அந்தஸ்தை இழந்து எதிர்கட்சித்தலைவியானார். இந்த சென்டிமெண்டை கருத்தில் கொண்டு ஜெயலலிதா நீராட கும்பகோணம் செல்வாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.