மீண்டும் போயஸ்தோட்டத்திடம் சிக்குமா தமிழகம்?
ரஜினியின் இன்றைய பேச்சு தமிழக அரசியலில் புது புயலை கிளப்பியுள்ளது. மீண்டும் போயஸ் தோட்டம் தமிழக அரசியலின் மையப்புள்ளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழக அரசியல் வானிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ரஜினியின் பேச்சு புது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போருக்கு தயாராகுங்கள் என்று தனது ரசிகர்களிடம் ரஜினி கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வருவேன் என்பதையே அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா இருந்தவரை போயஸ்தோட்ட ஏரியாதான் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்தது. கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் மற்றொரு முக்கிய லேண்ட் மார்க் ஆக இருந்து வருகிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு போயஸ் தோட்ட ஏரியா சாதாரண பகுதியாக மாறிவிட்டது. ஜெயலலிதா இந்த போது காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.
போயஸ் தோட்டம்
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட பகுதியில்தான் வசித்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது ரஜினியின் வாகனம் செல்வதற்கே போலீசார் கெடுபிடி காட்டினர் அதுவே ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்தது.
30 ஆண்டுகால அரசியல்
1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு அரசியலில் முக்கிய தலைவராக உருவெடுத்த ஜெயலலிதா, 1989ஆம் ஆண்டு எதிர்கட்சி தலைவரானார். 1991ல் தமிழக முதல்வரானார். அவர் வசித்த போயஸ்தோட்டம்தான் தமிழகத்தின் முக்கிய லேண்ட் மார்க் ஆக மாறியது.
ஜெ., ஜெ., என மொய்க்கும் கூட்டம்
அதிமுகவினர் பலரும் போயஸ்தோட்ட பகுதிக்கு வந்து செல்வதை காணமுடியும். எப்போதுமே மக்கள் கூட்டம் காணப்படுவதால் சிறு வியாபாரிகள் கடைகள் போட்டிருப்பார்கள். டீ கடை முதல் சிறு கடைகள் வரை அனைவருக்குமே நல்ல வியாபாரம் நடக்கும்.
களையிழந்த கார்டன்
டிசம்பர் 5, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு போயஸ்கார்டன் களையிழந்து விட்டது. சசிகலாவும் சிறை சென்று விட்டதால் மக்களின் கூட்டம் வருவதில்லை. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு ஊர் திரும்பி விடுகின்றனர்.
ரஜினி பேச்சு
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார் ரஜினி. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது போர் வரும் போது அழைக்கிறேன் அதுவரை சொந்த வேலைகளை பாருங்கள் என்று கூறியுள்ளார். போர் என்று ரஜினி கூறியது தேர்தலைத்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அரசியலில் வெற்றிடம்
ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக போயஸ்தோட்டமும், கோபாலபுரமும் களையிழந்துள்ளது. தமிழக அரசியலிலும் ஒருவித வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசியலுக்கு புது தலைவர் வருவாரா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மையப்புள்ளியாகுமா?
ரஜினி தனது ரசிகர்களிடம் பேசிய போது அரசியலுக்கு வருவேன் என்று சூசகமாக கூறியுள்ளதால் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு ரசிகர்களின் வருகை அதிக அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரஜினி தீவிர அரசியலில் இறங்கி வெற்றி பெற்று தமிழக முதல்வராவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். இதன் மூலம் மீண்டும் போயஸ்கார்டன் வசமாகுமா தமிழகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அரசியலில் குதித்து வீணாகிப் போன நடிகர் கார்த்திக்கின் வீடும் கூட இதே போயஸ் கார்டனில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.