தமிழக தலைவர்களே.. நீங்களும் ஈகோ பார்க்காதீங்க... அப்படி இருந்தா நீங்களும் ஆகலாம் நிதீஷ் , லாலு!
சென்னை: இந்திய அரசியலில் அவ்வப்போது கிங் மேக்கர்கள் உருவாவதுண்டு. மிகச் சிறந்த கிங் மேக்கர் என்று இன்றளவும் புகழ்ந்து பேசப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே. இருப்பினும் அவ்வப்போது சில கிங் மேக்கர்கள் வந்து கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் தற்போது லாலு பிரசாத் யாதவ் புதிய கிங் மேக்கராக மாறியுள்ளார்.
நேற்று வரை கிண்டலடிக்கப்பட்டு வந்தவர்தான் லாலு பிரசாத் யாதவ். ஊழல் குற்றத்தை சுமந்து நிற்பவர். தேர்தலில் கூட போட்டியிட முடியாத நிலையில் இருப்பவர்.
ஆனால் இன்னும் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் தலைவர். இதை சரியாக புரிந்து கொண்டுதான் நிதீஷ் குமார், லாலுவைத் தேடிப் போய் கூட்டணி சேர்த்தார். கெளரவம் பார்க்காமல், ஈகோ பார்க்காமல் இறங்கி வந்து லாலுவுடன் கை கோர்த்தார். இன்று அதற்கான பலனை நிதீஷும், லாலுவும் அறுவடை செய்துள்ளனர்.
நிதீஷால் கிடைத்த லாபம்
ஆனால் நிதீஷ் குமாரால்தான் லாலுவுக்கு இன்று இந்த அளவுக்கு மீண்டும் லைம்மலைட் கிடைத்துள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் அவரை விட லாலுவுக்கே அதிக தொகுதிகளை மக்கள் அளித்துள்ளனர்.
உனக்கு 71..எனக்கு 80
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்தக் கட்சிக்கு 80 இடங்கள் கிடைத்துள்ளன. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 இடங்கள் கிடைத்துள்ளனர். இவர்களின் இன்னொரு கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 27 இடங்கள் கிடைத்துள்ளன.
பெரும் லாபம்
இந்த தேர்தலில் நிதீஷ் குமாரால் பாஜகவுக்கு பெரும் பங்கம் ஏற்பட்டது என்றால், லாலுவுக்கும், காங்கிரஸுக்கும்தான் பெருத்த லாபம் கிடைத்துள்ளது. சட்டசபையில் லாலு இப்போது கிங் மேக்கராக மாறியிருக்கிறார்.
லாலு நினைத்தால்
மீண்டும் நிதீஷ் குமாரே முதல்வராக தொடர்வார் என்று லாலு அறிவித்துள்ளார். இது முன்பே இரு கட்சிகளும் இணைந்து பேசி உடன்பாடு கண்டதுதான். இருந்தாலும் நாளையே லாலு நினைத்தால், நிதீஷை முதல்வராக விடாமல் தடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால், அடுத்த சட்டசபைத் தேர்தலில் மஞ்சிக்குக் கிடைத்த கதியே லாலுவுக்கும் நேரும்.
தமிழகத்திற்கும் சில பாடங்கள்
வலுவான கூட்டணி அமைந்தால் நிச்சயம் மிகப் பெரிய எதிரியாக இருந்தாலும் மோதி தகர்க்கலாம் என்பதே பீகார் சட்டசபைத் தேர்தல் அனைத்து மாநில பிராந்தியக் கட்சிகளுக்கும் கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும். குறிப்பாக தமிழகத்திற்கு இது மிகப் பெரிய பாடமாக அமைந்துள்ளது.
வலுவான அதிமுகவை எதிர்க்க
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிமுக தனித்துப் போட்டியிடும் முடிவில் உள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பில் கூட்டணி அமைப்பதில் மிகப் பெரிய குழப்பம் காணப்படுகிறது.
ஈகோ.. ஈகோ.. ஈகோ
காரணம், ஈகோ. திமுக வந்து கெஞ்சட்டும் என தேமுதிக கருதுகிறது. தேமுதிக இறங்கி வரட்டும் என திமுக கருதுகிறது. மதிமுகவின் நிலை தெரியவில்லை. இறங்கிப் போக மறுத்து தனியாக ஒதுங்கி நிற்கிறது பாமக. இப்படி ஆளாளுக்கு ஒரு தினுசாக வலம் வந்து கொண்டுள்ளனர். இதனால்தான் அதிமுக மிகத் தெம்பாக காணப்படுகிறது.
அத்தனை பேரும் இறங்கி வந்தால்
பீகார் தேர்தலைப் பார்த்து அதை படிப்பினையாக கொண்டு அத்தனை முக்கிய எதிர்க்கட்சிகளும், ஈகோவையும், சுய கெளரவத்தையும் விட்டு விட்டு இறங்கி வந்து கூட்டு சேர்ந்தால் நிச்சயம் அதிமுக முகாமில் சுனாமி தாக்குதல் உறுதி என்பதில் சந்தேகம் இல்லை.
பார்க்கலாம் பீகாரைப் பார்த்து தமிழக அரசியல் தலைவர்கள் ஏதாவது கற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதை.