விபச்சாரத்தை விட்டால் வேறு கதி இல்லை.. அரவாணிகளின் கண்ணீர்க் கதை!
சென்னை: எங்களை சமூகத்தின் பெரும்பாலானவர்கள் மதிப்பதில்லை. அவமதிப்பே எங்களுக்கு மிச்சம். எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை. எந்த வேலையும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படி எங்களை எல்லோரும் ஒதுக்குவதால்தான், வேறு வழியே இல்லாமல்தான் விபச்சாரத்தில் வந்து விழுகிறோம் என்று அரவாணிகள் கண்ணீருடன் கூறுகின்றனர்.
அரவாணிகளில் சிலர் இதில் விதி விலக்காக இருந்தாலும் கூட பெரும்பாலாலும் விபச்சாரப் புகாரில் சிக்கி வரும் அவலம் தொடர்கிறது. இதுகுறித்து அரவாணிகளிடம் கேட்டால் அவர்கள் தங்கள் மீதான சமூகப் புறக்கணிப்பே இந்த அவலத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை. சமூகத்தில் எங்களை எல்லோரும் ஒதுக்கி வைத்தேப் பார்க்கின்றனர். இப்படி எல்லோரும் புறக்கணித்து விட்டதால்தான் விபச்சாரத்தில் நாங்கள் விழ வேண்டியுள்ளது என்பது அவர்களின் கருத்து.

கட்டாயத்தால் வந்தோம்
30 வயதான ஒரு அரவாணி கூறுகையில், நாங்கள் விரும்பி வருவதில்லை. கட்டாயத்தால்தான் விபச்சாரத்தில் குதிக்கிறோம். எல்லோரும் பணத்திற்காக விபச்சாரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் வேறு வழியில்லாமல்தான் இதற்கு வருகிறோம்.

வேலை தர மறுக்கிறார்கள்
நான் படிக்கவில்லை. யாரும் வேலை தர மாட்டேன் என்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. எனவே இந்தத் தொழிலுக்கு வந்து விட்டேன்.

உதவக் கூட யாருமில்லை
நான் அரவாணி என்பதை உணர்ந்ததுமே நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். எனக்கு உதவக் கூட யாரும் இல்லை. படிக்க வைக்கக் கூட யாரும் இல்லை. சாப்பிடக் கூட வழியில்லாத நிலை.

அடிப்பார்கள்.. காசு தர மாட்டார்கள்
நான் தினசரி ரவுடிகளிடம்தான் சிக்குகிறேன். குடிகாரர்களிடம் சிக்குகிறேன். அடிப்பார்கள், காசு தர மாட்டார்கள். வேலை முடிந்ததும் போய் விடுவார்கள். தட்டிக் கேட்க முடியாது. போலீஸாரும் எங்களை நிம்மதியாக விடுவதில்லை. தொல்லை கொடுப்பார்கள்.

அதைப் பிடுங்கித் தின்பார்கள்
நாங்கள் கஷ்டப்பட்டு உடலை வருத்தி சம்பாதிப்பதில் பெரும் பாதியை போலீஸார் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள். யாரிடம் போய் நாங்கள் முறையிடுவது..

பிடிக்கவில்லை.. ஆனால் வேறு வழியில்லை
எனக்கு விபச்சாரம் பிடிக்கவில்லை. இதை விரும்பவில்லை. ஆனால் போக வேறு வழியில்லை என்றார் அந்த அரவாணி.

படிக்க வேண்டும்
ஆனால் அரவாணிகள் சற்று மனது வைத்தால் அவர்களும் மற்றவர்களைப் போல சமூகத்தில் வாழ முடியும் என்பது தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவரின் கூற்றாக உள்ளது. முதலில் அவர்கள் அடிப்படைக் கல்வியைக் கற்க வேண்டும். சுயமாக தொழில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பாமல் சுய தொழிலில் ஈடுபட இது உதவும்.

சேர்ந்து செயல்படலாம்
அரவாணிகள் இணைந்து தங்களுக்குத் தெரிந்த தொழிலை கூட்டாக செய்யலாம். இப்படி செய்யும்போது அவர்களுக்கு சுய நம்பிக்கையும் கூடும், திறமையை மூலதனமாக வைத்து அவர்களும் சம்பாதித்து மற்றவர்களைப் போல கெளரவமாக வாழ முடியும் என்கிறார் அவர்.

வீடு கூட தர மாட்டேன் என்கிறார்களே
ஆனால் இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறார் இன்னொரு அரவாணி. சமூகம் எங்களை ஏற்றுக் கொள்ளவே இல்லை. பிறகெப்படி இதெல்லாம் சாத்தியமாகும். வீடு வாடகைக்குக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.

பிறந்து விட்டேன்.. என்ன செய்வது...
நானாக விரும்பி அரவாணியாகப் பிறக்கவில்லை. இப்படிப் பிறந்து விட்டேன். நான் என்ன செய்ய முடியும். அது என் குற்றமல்ல. சமூகம் இதை ஏற்க முன்வர வேண்டும். அப்போதுதான் எங்களது பல அவலங்களுக்கு விடிவு பிறக்கும் என்கிறார் அவர்.












Click it and Unblock the Notifications