இளைஞரணியும், மகளிரணியும் எனது இரு கண்கள்.. மகளிர் தினவிழாவில் ஸ்டாலின் பேச்சு
இளைஞரணியும் மகளிரணியும் எனது இரண்டு கண்கள் என திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவில் மட்டும் தான் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது என்று சென்னையில் திமுக மகளிர் தின விழாவில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இளைஞரணியும் மற்றும் மகளிரணியும் எனது இரண்டு கண்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினவிழா கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 10 சதவீத பெண்களும், மக்களவையில் 11 சதவீதம் பெண்கள் மட்டுமே உள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த குரல் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் 1989-ல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. திமுக தொடங்கிய நாள் முதல் மகளிர்க்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பெண்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் தேவைப்படுகிறார்கள். தொடர்ந்து மகளிரின் குறைகளை எடுத்து சொல்லும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. இளைஞரணியும் மற்றும் மகளிரணியும் எனது இரண்டு கண்கள். திமுகவில் மட்டும் தான் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுகவை விட மக்கள் தெளிவாக உள்ளனர். சசிகலாவின் பினாமி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். மேலும் தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை.
சட்டம்-ஒழுங்கு காக்க வேண்டிய காவல்துறை அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணமே மர்மமாக உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.