தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல் செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை அருகே பார் இல்லை. இதனால் இங்கு வந்து பாட்டில் வாங்கும் குடிமகன்கள் திறந்தவெளி, பெட்டி கடையின் இடுக்கு பகுதியிலும் நின்று மது குடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் போதை ஏறியதும் அவர்கள் அலங்கோலமாக வீதியில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் பலர் போதையில் ரகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் பயத்தில் உள்ளனர்.
இவர்கள் மீது புகார் கொடுக்க யாரும் முன்வராததால் 'குடி'மகன்களின் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை என்று புலம்புகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று மாலை அங்கு திரண்டனர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அவர்கள் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ. வேல்ராஜ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீசார் கலெக்டருடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்ததால் அங்கு திரண்டிருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.