குஜராத்தின் வெண்தாடி வேந்தர் மோடியாம்: சொல்கிறார் விஜயகாந்த்
சென்னை: குஜராத்தின் வெண்தாடி வேந்தர் மோடி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் சட்டசபை தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம். காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி ஆகியோருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் போரூர் சிக்னல் அருகே உள்ள குன்றத்தூர் மெயின் ரோட்டில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கூட்டணி
எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணியே முதல் கூட்டணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகும். எங்களுக்குள் வேறுபாடே இல்லை. ஜெயலலிதாவின் கனவு பலிக்காது. சில பத்திரிக்கைகள் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கின்றன.
சட்டம், ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது முதல்வருக்கு தெரியவில்லையா? போலீசார் அதிகமாக லஞ்சம் வாங்கி அதை வீட்டில் வைப்பதால் தான் அவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடக்கிறது.
மோடி
மோடி தான் முதல்வராக உள்ள குஜராத்தில் ஊழல் இல்லா ஆட்சி செய்து வருகிறார். அங்கு சுகாதாரம், தொழில்வளம், விவசாய வளம் ஆகிய மூன்றும் உள்ளதால் அவர் 3 முறை முதல்வராகி உள்ளார். தமிழகத்தில் அந்த 3 வளங்களும் இல்லை.
(மோடி தற்போது 4வது முறையாக முதல்வராக உள்ளார் என்பது விஜயகாந்துக்கு தெரியவில்லை போன்று).
வெண்தாடி வேந்தர்
தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என்றால் அது தந்தை பெரியார். குஜராத்தின் வெண்தாடி வேந்தர் மோடி தான். குஜராத்தில் ஒரு போலி குடும்ப அட்டை கூட கிடையாது.
ஜெயலலிதா
மோடி தனது மாநில மக்களுடன் தொடர்பில் உள்ளார். ஆனால் ஜெயலலிதாவோ தமிழக மக்களுடன் தொடர்பில் இல்லை. அவர் தான் வானிலேயே செல்கிறார். தரையில் வந்தால் தானே அவருக்கு மக்கள் பிரச்சனை பற்றி தெரியும். ஒரு தராசு தட்டில் அதிமுகவையும், திமுகவையும் வைத்துப் பார்த்தால் இரண்டுமே சமமாகவே இருக்கும் என்றார்.