மீண்டும் கைவசமாகுமா கோட்டை?... பிரம்மாண்ட வைரவிழா மேடை - உற்சாக திமுக
திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் அவரது சட்டப்பேரவை வைர விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக தமிழக சட்டப்பேரவை வடிவில் பிரம்மாண்டமான மேடை தயார் செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பத்திரிக்கையாளர்கள் 4 மணிக்கே நிகழ்விடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையிலும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்த, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரை தெரிவிப்பார் என திட்டமிடப்பட்டுள்ளது.
தேசியத் தலைவர்கள்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
சட்டப்பேரவை வடிவில் மேடை
கருணாநிதி சட்டப்பேரவை வைர விழாவுக்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு எதிரே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்றது.
திணறடிக்கும் பேனர்கள்
விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் ராயப்பேட்டை வரையிலும், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கும் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, சரத்பவார், வி.நாராயணசாமி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை வரவேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்.
முக்கியத்தவம் வாய்ந்த விழா
விரைவில் இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் அல்லாத கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அணி வகுப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தவும், வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கவும் அடித்தளமாக அமையும் என அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.