ராஜபக்சே வரக் கூடாது.. சேலத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
சேலம்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதை எதிர்த்து சேலத்தில் ஒரு வாலிபர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன, கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் பாஜகவோ இதில் தவறு இல்லை என்று கூறி விட்டது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்திற்கு வந்தார். அப்போது அவர் 5 லிட்டர் மண்ணெண்ணையையும் எடுத்து வந்து இருந்தார்.
பிறகு அவர் கோர்ட்டில் உள்ள நீதிதேவதை சிலை முன்பு நின்று கொண்டு கொடும்பாவி ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது உள்ளிட்ட கோஷங்களை முழங்கினார். பின்னர் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொள்ள முயற்சித்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரளாக வந்து வெற்றிவேல் வைத்து இருந்த மண்ணெண்ணை கேனை பறித்து கொண்டனர்.
பின்னர் வெற்றிவேலை பிடித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் வெற்றிவேல் கூறுகையில், நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வரக்கூடாது. அவர் இந்தியா வருவது என்னை போல் பலருக்கும் பிடிக்கவில்லை, என் எதிர்ப்பை தெரிவிக்க தீக்குளிக்க முயற்சித்தேன் என்று கூறினார்.