அந்தரத்தில் ஆபத்தான கிரிவலம்... 3,000 அடி உச்சி மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர் கதி என்ன?
முசிறியில் தானாய் வளர்ந்த தலைமலைப்பெருமாள் கோவிலில் கிரிவலம் வந்த பக்தர் தவறி விழுந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: முசிறி அருகே தலைமலை பெருமாள் கோவிலில் கிரிவலம் வந்த பக்தர் 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோவில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோவிலாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும். நினைத்த காரியம் நிறைவேறிய பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர். இங்கு ஆபத்தான முறையில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
மூலிகை மரங்களை கொண்ட அடர்ந்த பசுமையான இந்த தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோவிலுக்கு செல்ல மலையை சுற்றி ஐந்து வழிகளில் பாதைகள் உள்ளன.
இந்த மலையில் சஞ்சீவராய பெருமாள் என்று அழைக்கப்படும் நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக வீற்றிருக்கிறார். தானே வளர்ந்த பெருமாள் என்பதால் 'தானாய் வளர்ந்த தலைமலைப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இந்தப் பகுதியில் வாழ்ந்த நாயக்கர்கள் மலை உச்சியில் கோவிலை கட்டி பெருமாளை வழிபட்டு வந்தனர்.
இங்குள்ள கன்னிமார் குளத்தில் நீராடி பெருமாளை தரிசித்தால் வேண்டிய வரங்களையும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
தலைமலையின் உச்சி கோவிலின் மூலஸ்தானத்தில் சுயம்புவாக வளர்ந்த நல்லேந்திரபெருமாள் அருகிலேயே சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்களும். உற்சவர் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ அம்மன்களாகவும் கோவில் தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் அதன் அருகில் மகாலட்சுமி அம்மனும் உள்ளனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலின் மேல் பகுதியில் உள்ள எண்ணெய் கொப்பரையில் பெரிய வேட்டியால் திரி தயாரித்து நெய் ஊற்றி திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர். இந்த தீப ஒளியை மலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் அங்கிருந்த படியும் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு.
இந்த நிலையில் இன்று காலையில் கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இளைஞரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இளைஞர் தவறி விழுந்ததால் கிரிவலம் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.