நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் நாலும் தெரிஞ்ச ரூட் காரன்! பழசை மறக்காத கும்பகோணம் மேயர் சரவணன்!
தஞ்சாவூர்: தற்போது மேயர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும் அடிப்படையில் தாம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்.
ஆயுத பூஜையை ஒட்டி தனது ஆட்டோவை தாமே கழுவி சுத்தம் செய்து பெரியகடை வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு ஆட்டோவை ஓட்டி வந்த மேயர் சரவணன், அங்கு தனது சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுடன் பூஜையில் பங்கேற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சாதாரண வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணனை, மேயராக்கி அழகு பார்த்த கட்சி காங்கிரஸ் என்பது கவனிக்கத்தக்கது.

கும்பகோணம் மேயர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியகடை வீதி ஆட்டோ ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்தவர் சரவணன். காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அங்கு யார் மேயராக வரக்கூடும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் கே.எஸ்.அழகிரியோ ஒரு பெரிய ட்விஸ்ட் வைத்தார்.

மிகவும் எளிமை
அவர் வரப்போகிறார் இவர் வரப் போகிறார் என கற்பனை குதிரைகள் பறந்த நிலையில், சாதாரண ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக அறிவித்தார் கே.எஸ்.அழகிரி. இதையடுத்து கும்பகோணம் மேயராக பதவியேற்றுக் கொண்ட சரவணன், இன்னுமே தனது பழைய நிலைகளை மறக்காமல் எளிமையை பின்பற்றி வருகிறார். காலணி தொடங்கி ஆடைகள் வரை மேயராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே பாணியை தான் பின்பற்றி வருகிறார்.

பந்தா இல்லாதவர்
இதனிடையே மேயராகிவிட்டோம் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் வழக்கம் போல் ஆயுதபூஜையான நேற்று தனக்கு வாழ்வாதாரம் தந்த ஆட்டோவை கழுவி சுத்தம் செய்து பெரிய கடைவீதி ஆட்டோ ஸ்டாண்டிற்கு தாமே ஓட்டிச் சென்றார் மேயர் சரவணன். பழசை மறக்காத சரவணனின் குணத்தை பார்த்த அவரது சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்கள் அவரை கொண்டாடினர். இதனிடையே இது குறித்து தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் பதிவு வைத்துள்ள அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாண்டிற்கு எனது ஆட்டோவை நானே ஓட்டிச் சென்றது மன நிறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குணத்திலும் தங்கம்
இதேபோல் மேயர் சரவணன் குணத்திலும் தங்கம் என்ற பெயரை எடுத்திருக்கிறார். இதுவரை அதட்டி மிரட்டி யாரிடமும் பேசியது கிடையாது. பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தம்பி என்ற சினிமா பாடலுக்கு உதாரணமாக தனது வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டுள்ளார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்.












Click it and Unblock the Notifications