அரசு மரியாதையுடன் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்
தஞ்சாவூர்: கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் 66 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வரின் தாய் மரணமடைந்ததை அடுத்து முதல்வரை சந்தித்து துக்கம் விசாரிக்க சென்னையிலிருந்து சேலம் நோக்கி கடந்த 13-ஆம் தேதி சென்றுக் கொண்டிருந்தார் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சோதனை
அவருக்கு எக்மோ கருவியும் செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டு 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

அமைச்சர்கள்
எனினும் அவர் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் உதவிகளுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

உயிர் ஆதார செயல்பாடுகள்
இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மிகவும் அபாய கட்டத்தில் உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் உயிர் காக்கும் கருவிகள் பொருத்தியும் அவரது உயிர் ஆதார செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.

66 குண்டுகள் முழங்க
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் இரவு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. இந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரான ராஜகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 66 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications