தஞ்சை விளார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சசிகலா அஞ்சலி- இனப்படுகொலையை விவரித்தார் பழ. நெடுமாறன்!
தஞ்சாவூர்: தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூர் அருகே விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சசிகலா இன்று மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்றார்.
Recommended Video
அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன
ஈழத் தமிழருக்கு தமிழீழ தனிநாடு கோரி நடந்த யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது இந்த யுத்தம். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காலத்தில் லட்சக்கணக்காக அப்பாவி தமிழர்கள் ஈவிரக்கமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்டனர்.
மே 18 நினைவேந்தல்
சிங்களப் பேரினவாதத்தின் இந்த இனப்படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்காமல் உலகத் தமிழினம் தொடர்ந்து போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் உலகத் தமிழர்கள் மே 18-ல் நினைவஞ்சலி செலுத்துகின்றனர். இலங்கையிலும் இந்தியாவிலும் தடைகளை மீறியே இந்த நினைவேந்தல் நடத்தப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் முற்றம்
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் தமிழீழ விடுதலைப் போரை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சாவூர் விளார் அருகே முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இந்த முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையிலும் சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராசனின் நிதி உதவியாலும் இந்த முற்றம் உருவாக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் அருகேதான் ம.நடராசனின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சையில் சசிகலா
இதனிடையே தஞ்சாவூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா, கணவர் நடராசன் நினைவிடத்துக்கு சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சென்ற சசிகலா, வீரமரணம் அடைந்த போராளிகள், பொதுமக்கள் நினைவாக மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சசிகலா பார்வையிட்டார். அவருக்கு பழ.நெடுமாறன், ஈழப் போர் குறித்த விவரங்களை விளக்கினார்.
சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவருடன் பழ.நெடுமாறனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பழ.நெடுமாறன், பிரதமர் மோடி, மத்தியில் ஆளும் பாஜக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை பற்றி அதிகம் புகழ்ந்து பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.