குலதெய்வ கோவிலில் கண்ணீர் மல்க கும்பிட்ட சசிகலா - சாமியார் சொன்ன ஆருடம் பலிக்குமா
25 ஆண்டுகளுக்குப் பிறகு கணவர் நடராஜனின் குலதெய்வ கோவிலில் சென்று வழிபட்டுள்ளார் சசிகலா. சசிகலா நினைத்தது 2 மாதத்தில் நிறைவேறும் என்று ஆருடம் கூறியுள்ளாராம் ஒரு சாமியார்.
தஞ்சாவூர்: அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும் சசிகலா அவரது கணவர் நடராஜனின் குலதெய்வ கோவிலில் இன்று வழிபட்டுள்ளார். கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்ட சசிகலாவிடம் அவர் நினைத்தது 2 மாதத்தில் நிறைவேறும் என்று ஆறுதல் கூறியுள்ளாராம் ஒரு சாமியார்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருவார ஓய்விற்குப் பிறகு சில பிரபலங்களை சந்தித்தார். திடீரென அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு விட்டு அமைதியாகிவிட்டார்.
மாசி அமாவாசைக்குப் பிறகு அவர் ஆன்மீக பயணம் புறப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில் சென்னையில் தங்கியிருந்த சசிகலா குல தெய்வ கோவிலில் நடைபெற்ற காதுகுத்து விழாவில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.
மதுரை வீரன் குலசாமி
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொந்தமாக குலதெய்வம் தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் உள்ளது. வீரனார், மதுரை வீரன் கோவில். வயல்வெளி, தென்னந்ததோப்பிற்கு இடையே அமைந்துள்ள கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று சசிகலா வருவதை முன்னிட்டு குலசாமிக்கு காணிக்கையாக நேற்றே கிடா வெட்டி கறி சோறு போட்டு அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா
இன்று காலை நடைபெற்ற காதுகுத்து விழாவில் பங்கேற்ற கோயிலுக்கு வந்தார் சசிகலா. அவருடன் சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார். திருமணம் நடைபெற்ற புதிதில் கணவர் நடராஜனுடன் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறார் சசிகலா. 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்திருக்கிறார் சசிகலா.
குழந்தைகளுக்கு காது குத்து விழா
வீரனார், மதுரைவீரனுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப விழாவில் பங்கேற்ற சசிகலா உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டாராம்.
கண் கலங்கிய சசிகலா
குல தெய்வ கோவிலில் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டாராம் சசிகலா. கோவில் பீடத்தில் முன்னோர்கள் நம் தெய்வம்; உறவுகள் ஒற்றுமை; நட்பும் நன்றியும் மறவோம் என்று செதுக்கப்பட்டிருந்த வாசகங்களையும் படித்த அவர், நட்பும் நன்றியும் மறவோம் என்று மாமா நடராஜன் சொல்வார். அதனை கோவிலிலும் எழுதி வைத்துள்ளார் என்று சொன்னார்.
நன்றி மறந்தவர்கள்
அரசியலில் நட்பும், நன்றியும் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே பலருக்கு தெரியமல் போய்விட்டது. கடைசி வரை அந்த வார்த்தைக்கு பாத்திரமா நான் இருந்துட்டா போதும் என்று அருகில் நின்றிருந்த வெங்கடேசிடம் சொன்ன போது சசிகலாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்கவே செய்தது.
நினைத்தது நடக்கும்
சசிகலா சாமி கும்பிட்டு முடித்த உடன் அங்கு வந்த சாமியார் ஒருவர், இனி நீ நினைத்த காரியம் எல்லாம் நிச்சயம் நடக்கும். தோல்வியே உனக்கு இனி இல்லை என்று ஆருடம் சொன்னாராம். அதைக்கேட்ட பின்னர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு புறப்பட்டு சென்று விட்டாராம் சசிகலா.
நினைவிடத்தில் சசிகலா மரியாதை
வரும் 20ம் தேதி சசிகலாவின் கணவர் நடராசனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வருகிறது. அவரது சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளாராம் சசிகலா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகலாவின் தஞ்சாவூர் பயணம் அவரது ஆதரவார்களிடையேயும் உறவினர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.