சம்பந்திக்கா? மூத்த மகனுக்கா? - தஞ்சையில் தொடரும் 'சீட்' குழப்பம்.. குறிவைக்கும் பாஜக
தஞ்சாவூர்: தஞ்சை சட்டமன்ற தொகுதி ஒரு பெரும் குழப்பத்தில் உள்ளது. அங்குள்ள அதிமுக கட்சியினரின் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் கணக்குகள் எந்த வேட்பாளரை புரமோட் செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. ஆனால், இதுவரை அரசல் புரசலாகக் கூட, அதிமுக கூட்டணியில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பது தெளிவாகவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக திமுக, அதிமுக அல்மோஸ்ட் தனது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு கணக்கை இறுதி செய்யும் இடத்திற்கு வந்துவிட்டன.
6 வேட்பாளர்கள் லிஸ்ட் அவசரமாக வெளியானது ஏன்?.. மேட்டரே வேறயாம்.. முணுமுணுக்கும் தகவல்கள்!
இருப்பினும், சில தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. குறிப்பாக தஞ்சையில்..
தடுமாற்றம் ஏன்?
தஞ்சையைப் பொறுத்தவரை யார் வேட்பாளர் என்பதை உறுதி செய்யும் சக்தியாக இருப்பவர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தான். இவர் யாரைக் கைக் காட்டுகிறாரோ அவருக்கே சீட். ஆனால், களத்தில் வைத்திலிங்கம் தரப்பினரே குழப்பத்தில் உள்ளனர்.
செல்வாக்கு சம்பந்தி
வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி. இவரது மகள் தான் வைத்திலிங்கத்தின் இரண்டாவது மகனின் மனைவி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தவமணி தான் தஞ்சையில் போட்டியிடப் போகிறார் என்ற செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. தவமணிக்கும் தஞ்சையில் நல்ல செல்வாக்கு உள்ளது. அரசியல் சார்ந்த பணிகளில் தவமணி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தினம் அவரது வீட்டின் கேட் முன்பு, பல வெள்ளை வேஷ்டிகள் காத்திருப்பதை காண முடியும். ஸோ, தவமணிக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது.
சம்பந்தியா? மகனா?
அதேசமயம், வைத்திலிங்கத்துக்கு வேறொரு சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. அதவாது அவரது மூத்த மகன் தனக்கு தான் இம்முறை சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பதாகவும், இதனால் சம்பந்திக்கு சீட் கொடுப்பதா, மகனுக்கு சீட் கொடுப்பதா என்ற குழப்பத்தில் வைத்திலிங்கம் இருப்பதாக தெரிகிறது.
தொண்டர்கள் குழப்பம்
இந்த குழப்ப சூழலில், தவமணி சார்பில் இதுவரை எவருமே வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. அதேபோல், வைத்திலிங்கத்தின் மூத்த மகனும் வேட்பு மனுத் தாக்கல் செய்ததாக தெரியவில்லை. இதனால், தொண்டர்கள் 'என்னதான்யா நடக்குது' மோடில் குழப்பத்தில் உள்ளனர். வைத்திலிங்கம் நிசப்தமாக உள்ளார்.
பாஜகவுக்கும் வாய்ப்பு
அதேசமயம், தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை பகுதிகளில் வலிமையாக உள்ள தமாகா-வின் ஜி.கே.வாசன், தஞ்சை தொகுதியை கேட்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், பாஜகவின் கருப்பு முருகானந்தத்திற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், கருப்பால் தனியாக தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை வைத்திலிங்கம் அமைதியாக இருப்பதை பார்த்தால், தஞ்சை தொகுதி தமாகாவுக்கோ, பாஜகவுக்கோ ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.