தஞ்சையிலிருந்து பிரிக்கப்படுமா கும்பகோணம்? 18 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஏப்ரல் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரை பிரித்து திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உருவாகின.
2 ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு நாகையிலிருந்து பிரித்து மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கப்பட்டது.

எடப்பாடி ஆட்சியில் புதிய மாவட்டங்கள்
அத்துடன் நெல்லையிலிருந்து பிரித்து தென்காசி என்ற தனி மாவட்டமும், வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு என்ற தனி மாவட்டமும், விழுப்புரத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி என்ற தனி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

கும்பகோணம் தனி மாவட்டக் கோரிக்கை
அதே நேரத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக அங்குள்ள 2 பெரிய நகரங்களாக கும்பகோணமும், பட்டுக்கோட்டையும் உள்ளன. இதில் கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதேபோல் பட்டுக்கோட்டையையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம்
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நகராட்சியாக இருந்த கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டது. இதற்கிடையே தங்கள் நீண்டநாள் விருப்பமான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இதற்காக "கும்பகோணம் மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழு" என்ற பெயரில் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போராட்டக்குழுத் தலைவராக வன்னியர் சங்க தலைவர்
இந்த போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர் தி.ஜோதிராஜ், அமமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளார் பொன்.த.மனோகரன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் அய்யப்பன், தேமுதிக மாவட்ட செயலாளர் கோ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications