வேலியில் சிக்கிய சிறுத்தை.. சிக்கலில் சிக்கிய ஓபிஆர்! “ஸ்கெட்ச்” போட்ட திமுக! களமிறங்கிய ‘தங்கம்’!
தேனி : தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் புகார் அளித்துள்ளதால் ஓபிஆருக்கு கூடுதல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓ.பி.எஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தது.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர்.

ரவீந்திரநாத் எம்.பி.
மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டம்
இதை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்ய வேண்டும்
வனத் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூடுதல் சிக்கல்
இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்,திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தாவிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் ஓபிஆருக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications