திருமணத்துக்கு பிளக்ஸ் வைப்பதில் மோதல்- கம்பம் அருகே 6 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே, நாராயண தேவன் பட்டி ஊராட்சியில், அதிகாலையில் ஆறு இடங்களில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயண தேவன் பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி தெருவில், இன்று அதிகாலையில் ஆறு இடங்களில் தொடர்ந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த சத்தத்தால், தூக்கம் கலைந்த அப்பகுதி மக்கள், வெளியே வந்து பார்த்த போது, சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வெடி சத்தத்தின் அதிர்வலைகளால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளும், இருசக்கர வாகன விளக்குகளும் உடைந்துள்ளன. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பொதுமக்களும், குழந்தைகளும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில், வெடித்த பாகங்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவை நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்துள்ளது. 6 இடங்களில் கல்குவாரிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் இரு குழு இளைஞர்களுக்குள் பிளக்ஸ் போர்டு வைப்பதில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் 6 இடங்களில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற சம்பவம், நாராயண தேவன்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications