ஒரே மர்மமா இருக்குதே.. மீண்டும் சர்ச்சையில் தேனி.. திபுதிபுவென வந்து இறங்கிய விவிபேட் இயந்திரங்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, தேனிக்கு, விவிபேட் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு, 15 தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலிருந்து, 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்வதாக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவை, தேனியில் இருப்பு வைப்பதற்காக கொண்டு வரப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
என்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்
திடீர் முடிவு
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இன்று காலை விவிபேட் இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள் தேனியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், லட்சுமிபுரத்திலுள்ள தமிழ்நாடு மாநில மைய சேமிப்பு கிடங்கிலிருந்து விவிபேட் இயந்திரங்களும், கன்ட்ரோல் யூனிட்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, நேற்றே அனைத்துக் கட்சியினருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துவிட்டார்.
சீல் வைப்பு
இதையடுத்துதான், இன்று காலை 6 மணியளவில் சுற்றுலா வேனில் தேனி தாலுகா அலுவலகத்திற்கு விவிபேட் இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாகனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன்பிறகு, காலை 9 மணியளவில், அனைத்து கட்சியினர் முன்னிலையில், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி உள்ளிட்டோர் தலைமையில் வேனிலிருந்த 30 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் 20 கன்ட்ரோல் யூனிட்கள் தாலுகா அலுவலக குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் விவிபேட் வைக்கப்பட்ட அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தேனியில் மட்டும் மர்மம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியவர். மேலும், வாரணாசி வரை சென்று மோடியின் வேட்புமனு தாக்கலின்போது தனது தந்தை பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பங்கேற்றவர். இந்த நிலையில், அடுத்தடுத்து, தமிழகத்தில் வேறு எங்குமே இடம் இல்லாத வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட்கள் தேனி நோக்கி அணி வகுக்கின்றன.
முறைகேடு குற்றச்சாட்டு
இதனால்தான், எதிர்க்கட்சிகள் கடும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அமமுகவின் தங்கத்தமிழ்ச் செல்வன் ஏற்கனவே அளித்த பேட்டியின்போது, ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்க முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டு சர்ச்சைகளால் அது மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்க தகவலாகும்.