மார்கழி மாத மழை..குற்றாலத்தில் தெறி வெள்ளம்..குளிக்க தடையால் ஐயப்பசாமிகள் ஏமாற்றம்
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் அருவிகளில் நீராட வந்தவர்களும், ஐயப்பசாமி பக்தர்களும் நீராட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதன் காரணமாக பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம்,கடையநல்லூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தின் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
பழைய குற்றாலத்திலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தருவி பகுதியில் மட்டும் நீர்வரத்து சீராக உள்ளதால் அங்கு பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பின்பு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறையால் குற்றாலத்தில் ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர். ஐயப்பசாமிகளும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து விட்டு புளியரை பார்டர் வழியாக குற்றாலத்திற்கு வந்துள்ளனர். அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மார்கழி மாதம் நீராட வந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர், கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை, போரூர், தேனாம்பேட்டை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் கடலோர மாவட்டங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications