அதிரடி காட்டிய டெல்லி.. சரித்திர முடிவு.. “உயிர் உள்ளவரை காங்கிரஸ்” உணர்ச்சிபொங்க பேசிய ரூபி மனோகரன்
நெல்லை : இடைநீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி, காங்கிரஸ் கட்சிக்காக எனது வாழ்க்கையை ஒப்படைத்து விட்டேன், இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன் என நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார்.
ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகரன், இடைநீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி. காங்கிரஸ் கட்சி பலமாக செல்கிறது என்பதற்கு உதாரணம் தான் இது எனத் தெரிவித்துள்ளார்.
என் ஆசையில மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. ரொம்ப வருத்தமாக இருக்கு.. புலம்பிய காங்கிரஸ் ரூபி மனோகரன்
காங்கிரஸ் அடிதடி
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ மற்றும் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.
காலை இங்கே - மாலை மேலிடத்தில்
இதன் அடிப்படையில் நேற்று கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ரஞ்சன் குமார் ஆஜராகினார். ஆனால், ரூபி மனோகரன் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்து நேரில் ஆஜராக அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி நேற்று காலை அறிவித்தார்.
டெல்லியில் மூவ்
தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட மோதல் விவகாரம் பற்றி காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில் குழப்பங்களுக்கு வழிவகுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ரூபி மனோகரனின் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, எனவே, ரூபி மனோகரனுக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாலையில் அறிவித்தது.
துடைத்தெறியப்பட்டுள்ளது
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பலமான திசையை நோக்கி செல்கிறது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற பொய்யான தகவல் துடைத்தெறியப்பட்டு உள்ளது. இடைக்கால நீக்கத்தில் உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சரித்திர முடிவு
காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவாகும். இதனை காங்கிரஸ் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்கிறேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன். காங்கிரஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சி கொடுத்த கொடை.
என் வாழ்க்கையே கட்சிக்கு
என் வாழ்க்கையை காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒப்படைப்பேன். ராகுல் காந்தியின் நடைபயணம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 2024ல் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. கட்சியில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் பண்புடைய தலைவர் தலைமை பொறுப்பில் உள்ளார். காங்கிரஸில் இனி தவறு நடக்காது, பழைய சம்பவங்களை மறக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.