குடும்பத் தகராறு.. மகள், மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்.. நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லையில் குடும்பத் தகராறு காரணமாக மகள், மருமகனை மாமனார் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சீதபற்பநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி தேவர். இவருடைய மகன் சிறுத்தை என்ற செல்வம். இவருடைய மனைவி உச்சிமாகாளி என்ற மஞ்சு.
இவர்களுக்கு மணிகண்டன் (8), முகேஷ் (4). புவனேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மஞ்சுவின் கணவர் செல்வம் பெண் கட்டிய தனது மாமனார் ஊரான நந்தன்தட்டை கிராமத்திலேயே தனது குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
சூழ்நிலை
இந்நிலையில் சிறுத்தை செல்வத்தின் குடும்ப சூழ்நிலையை கருதி அவரது மனைவி மஞ்சுவின் தந்தையான நந்தன்தட்டை கிராமத்தைச் சேர்ந்த புலேந்திரன்(60), மஞ்சுவின் மூன்று குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இதற்கிடையே குடும்ப சூழ்நிலையின் காரணமாக புலேந்திரனுக்கும் சிறுத்தை செல்வத்திற்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
மாமனார்
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் புலேந்திரன் வழக்கம்போல் தனது பேரக்குழந்தைகளை கொஞ்சி விளையாடி உள்ளார். இதை அறிந்து மாமனார் மீது கோபம் கொண்டிருந்த சிறுத்தை செல்வம் தனது குழந்தைகளை தொடக்கூடாது என மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சமாதானம்
இதை அறிந்த மஞ்சு இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த புலேந்திரன் தனது வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மருமகன் என்று கூட பாராமல் சரமாரியாக வெட்டினார்.
விசாரணை
இதை தடுக்க முற்பட்ட மஞ்சுவின் மீதும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாப்பாகுடி காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேற்படி இரு சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.