ஈபிஎஸ் அறிவிப்பு ரிஜெக்டட்.. வேற யாருக்கும் இல்ல.. நெல்லையில் பரபரக்கும் அதிமுக நிர்வாகியின் போஸ்டர்
நெல்லை : அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே எடப்பாடி பழனிசாமி கிடையாது என நெல்லை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி தமிழரசி என்பவர் நெல்லை முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வரும் நிலையில், இந்த போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுகவை குன்றாமல், குறையாமல் எடப்பாடி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்: ஓ.எஸ்.மணியன்
அதிமுகவில் பிளவு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் பிளவு ஏற்பட்ட நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும், அந்த இடத்தில் வேறு யாரும் வரக்கூடாது என்றும் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி இருவரும் இருந்து வந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு, தானே கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை எனக் கூறி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கினார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் தானே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் தன்னை கட்சியை விட்டு நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.
மாற்றி மாற்றி
தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளைகளை ஓ.பன்னீர்செல்வமும் மாற்றி மாற்றி நீக்கி வருகின்றனர். போட்டி போட்டு இருதரப்பும் கட்சியை விட்டு நிர்வாகிகளை நீக்கியதில் இதுவரை 66 பேர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பினர் இதுவரை 45 பேரை நீக்கியுள்ளனர். இதனால், கட்சியில் யார் இருக்கிறார்கள் என தொண்டர்களே குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரபர போஸ்டர்
இந்நிலையில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று தெரிவித்து என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே, எடப்பாடி பழனிச்சாமி கிடையாது என்று நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி தமிழரசி நெல்லை முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மட்டுமே
அதிமுக நிர்வாகி தமிழரசி ஒட்டியுள்ள போஸ்டரில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்க்கப்பட்ட அறிவிப்பையும் குறிப்பிட்டு 'ரிஜெக்டட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 'நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா மட்டுமே! Not EPS' என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் நெல்லை மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.