உளவியல் டார்ச்சரில் சீமான்.. ஸ்லீப்பிங் மோடில் கட்சி.. புலம்பும் நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகிகள்
திருநெல்வேலி: சீமானுக்கு கொள்கையில் பிடித்தம் இல்லை. அவர் உளவியல் டார்ச்சரில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் அடிமையாக இருக்க வேண்டியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் எண்ணம் சீமானுக்கு இல்லை. கட்சி ஸ்லீப்பிங் மோடில் உள்ளது என்று நாம் தமிழரில் இருந்து விலகிய நெல்லை நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனிடம் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்சியில் இருந்து விலகுவதாக கூறி பலர் வெளியேறினர்.

இந்த நிலையில், இன்று அக்கட்சியில் இருந்து விலகிய திருநெல்வேலி மத்திய மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் பர்வின், மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், சீமான் புரட்சியாகப் பேசுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
நம் முன்பு யாரும் எம்எல்ஏ ஆகி விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். சீமானுக்கு தனது கொள்கையில் பிடித்தம் இல்லை. நாம் தமிழர் கட்சியில் அடிமையாக இருக்க வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்திலும் வேலையையும் விட்டுவிட்டு கட்சிக்காக உழைக்கிறோம். ஆனால், அதற்கான அங்கீகாரம் நாம் தமிழர் கட்சியில் கிடைக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி அடுத்தகட்டத்திற்கு நகராது என்பதை தெரிந்து கொண்டு கட்சியிலிருந்து வெளியேறுகிறோம். சீமான் உளவியல் ரீதியிலான டார்ச்சரில் இருக்கிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. நாம் தமிழர் கட்சியே ஸ்லீப்பர் செல் ஆகிவிட்டது. சீமான் பதட்டத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினியை எதிர்க்கிறார் ஆனால் அவரை போய் சீமான் சந்திக்கிறார்.
சங்கி என்றால் சக தோழன் என சீமான் பதிலளிக்கிறார். அடுத்து நாள் சங்கியா நான் என்கிறார். விஜயை ஆதரித்து வந்தார். அடுத்து அவரை எதிர்க்கிறார்.
சீமான் கருத்துக்காக மட்டுமல்ல. நாங்கள் களத்தில் வேலை பார்ப்பதால் தான் வாக்குகள் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் சீமான் ஒவ்வொரு மாதிரியாக பேசுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அவர் பேசும் அனைத்துக்கும் முட்டுகொடுத்து கொண்டே தான் இருக்கிறோம்.
தொடர்ந்து எவ்வளவு நாள் தான் அடிமையாக இருக்க முடியும். சீமானை செய்வினை பொம்மையை போல் செயல்படுத்துகின்றனர். நாம் தமிழர் கட்சி ஸ்லீப்பிங் மோடுக்கு போய்விட்டது. எங்களை கோமாளிகளாக்குகின்றனர். எனவே தான் இன்று சுமார் 50 பேர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம் என்றனர்.
தொடர்ந்து அடுத்தகட்டமாக வேறு ஏதாவது கட்சியில் இணைய போகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது அடுத்த கட்ட நகர்வு குறித்து நாங்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்து முடிவை அறிவிப்போம் தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் சேரும் முடிவில் இல்லை என்றனர்.












Click it and Unblock the Notifications