இதனால் தான் அதிமுக அழியப் போகிறது .. தேர்தலில் பழிவாங்கப்பட்டேன்.. ஜான் பாண்டியன் ஆவேசம்
திருநெல்வேலி : இரட்டை தலைமையால் அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. தேர்தலில் நான் பழிவாங்கப்பட்டேன் என த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் ஆவேசமாக தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜான் பாண்டியன் தோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து இதுவரை வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்த அவர், முதல் முறையாக அதிமுகவின் இரட்டை தலைமை குறித்து விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் திருநெல்வேலியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் வென்ற தி.மு.க.,அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாராட்டு தெரிவிப்பது, மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜான் பாண்டியன் விளக்கம்
பின்னர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக உடன் தமமுக உறவு நீடிக்கிறது. ஆனால் கூட்டணி இல்லை. தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு நன்றி செல்லும் வகையில்தான் அதிமுக பாஜக கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்.
வாய்ப்பு மறுப்பு
சட்டசபை தேர்தலில் போட்டியிட தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன், ஆனால் சட்டசபை தேர்தலில் எங்களை பழிவங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் வளர்ந்துவிடக்கூடாது என்ற என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத தொகுதியில் ( எழும்பூர்) போட்டியிட வாய்ப்பு வழங்கினர் .
அதிமுக அழியும்
தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன். இதனால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தென் மாவட்டங்களில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தான் பலர் வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுகவில் ஒரே தலைமை தான் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் அதிக அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ஓ பன்னீர்செல்வம் சரியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.
ஜான் பாண்டியன்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எங்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துவோம்" இவ்வாறு கூறினார்.