திருநெல்வேலி டூ துபாய்.. வெளிநாடு சென்ற தாய்.. மீண்டும் குழந்தையைக் கேட்ட போது உறவினர்கள் தர மறுப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து துபாய் செல்வதற்காக குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நிலையில், திரும்பி குழந்தையை கேட்கும்பொழுது, உறவினர்கள் குழந்தையை தர மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண் பரிதவித்து போனார். இதையடுத்து குழந்தையின் தாயார் உறவினரது வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பலர் துபாய், சிங்கப்பூர், மலேசியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேலைகளுக்கு செல்கிறார்கள். இந்த வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், வீட்டு வேலைக்காக பெண்கள் செல்வது அதிகரித்துள்ளது. தங்கள் குழந்தைகள், கணவனை பிரிந்து பல பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.

அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த 36 வயதாகும் பிரவீனா வெளிநாடு வேலைக்காக குழந்தையை பிரிந்து சென்றவர், இப்போது அவதிப்படுகிறார். பிரவீனா சென்னையைச் சேர்ந்தவர். இவரது கணவர் குணசீலன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரவீனா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கிடையில், வேலைக்காக துபாய் சென்ற பிரவீனா, அங்கு பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, கொரோனா காலத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு குருநாதன் பிரவீனாவை அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2020ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடந்து, விசா புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குழந்தையை துபாய்க்கு அழைத்துச் செல்வதில் தம்பதிக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குருநாதரின் உறவினரான சங்கர், கவிதா மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் குழந்தையைப் பராமரித்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு இருவரும் துபாய் சென்றுவிட்டார்கள்.
தொடர்ந்து, குழந்தையைப் பராமரிப்பதற்கு மாதந்தோறும் ஆன்லைன் மூலமாக பிரவீனா பணம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு திருநெல்வேலி வந்து பிரவீனா, சங்கர் - கவிதாவிடம் தங்கள் குழந்தையைக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களைக் காட்டி குழந்தையைத் தர மறுத்திருக்கிறார்கள் இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர், தனிப்பிரிவு டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனது குழந்தையை மீட்டு தரக்கோரி, குழந்தை தற்போது வைத்துள்ள திருநெல்வேலி சாந்தி நகர் 28வது தெருவில் உள்ள கவிதா- சங்கர் வீட்டு வாசலில் அமர்ந்து பிரவீனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரவீனாவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
இந்நிலையில், குழந்தையைக் கேட்கும் போது குழந்தையை தர மறுப்பதாகவும், இரண்டாவது கணவர் குருநாதன் குழந்தையை விற்றுவிட்டதாக கூறி தன்னை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்களை பிரவீனா கூறினார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications