என்டிஏ மட்டும்தான்.. அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை? பாமக தலைவர் அன்புமணி சூசக பதில்!
திருவள்ளூர்: தமிழகத்தில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, மாவட்டவாரியாகச் சென்று, கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கரும்பேடு, பள்ளிப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கினார்.

நெசவுத் தொழில்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதியில், விவசாயம், நெசவு தொழில் தான் முக்கியமான தொழில். அதிக நெசவாளர்கள் உள்ள பகுதியில், நீண்ட காலமாக நெசவு பூங்கா வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசுக்கு கோரிக்கை
நெசவுத் தொழில் அழிந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட ஊதியம் இல்லை. ஓர் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் மட்டுமே வரும். இது போதுமானதாக இல்லை. விலைவாசி ஏறிவிட்டதால் நெசவாளர்களுக்கு போதுமான ஊதியத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். நெசவுத் தொழிலுக்கு என்னென்ன தேவையோ, அனைத்தையும் அரசு செய்து தர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பள்ளிப்பட்டு பகுதியில் நெசவு பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயம், நெல் போன்றவற்றை பதப்படுத்துகின்ற இப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் இங்கு மருத்துவ வசதி இல்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு சிறப்புக் கவனம் கொண்டு நல்ல திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று கூறினார்.

அதிமுக விவகாரம்
இதனைத்தொடர்ந்து அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக-வில் உட்கட்சி பிரச்னை உள்ளது. அதனைப் பற்றி கருத்து கூற இயலாது. அதிமுக என்பது தமிழகத்தில் வலுவான கட்சியாகும். அதனால் அவர்களின் உட்கட்சி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாமக கூட்டணி
இதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் பாமக கூட்டணி இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அன்புமணி ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் டெல்லியில் மட்டுமே பாமக கூட்டணியில் உள்ளது. 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாமக ஆட்சியமைக்கும். மொழி, விவசாயம், கல்வி, சமூக நீதி, வேலைவாய்ப்பு என்ற பொதுவான கொள்கை உள்ள கட்சிகளுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications