திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம் - பக்தர்கள் அரோகரா முழக்கம்
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்களும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களும் சேர்ந்து மொத்தம் 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த பக்தர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை.
நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் கார்த்திகை தீபத்திருவிழா கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சரத தேரோட்டம் சில தினங்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. இன்று மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் வணங்கினார்.
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும்.
அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். இந்த மகா தீபம் 11 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்களும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களும் சேர்ந்து மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த பக்தர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை.
நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தீபத்திருவிழாவை இணைய தளத்திலோ அல்லது தொலைகாட்சிகளிலோ காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications