நம்ம திருவண்ணாமலைய கையில பிடிக்க முடியாது! மாஸா வருது மினி டைடல் பார்க்! இனி சென்னைக்கு போக வேண்டாம்
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, ஒசூர் உள்ளிட்டவை மட்டுமே தகவல் தொழில்நுட்ப நகரங்களாக தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், திருவண்ணாமலை மினி டைடல் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சென்னை சிறப்பான இடத்தை பெற்று இருக்கிறது. பெங்களூருக்கு அடுத்ததாக சென்னை தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் சென்னை நோக்கியே செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் பார்க் நியோ ஆகியவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, ஓசூர் ஆகியவை தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றத்தில் உள்ளன.

ஏற்கனவே தஞ்சை உள்ளிட்ட சில பகுதிகளில் டைடல் செயல்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர், மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த பாய்ச்சலாக ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
சுமார் 63,200 சதுர அடி பரப்பளவில் 37 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மினி டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது மட்டுமல்லாது மறைமுகமாகவும் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர். பார்க்கிங்காக தரைக்கு கீழே கட்டிடம், தரை தளம், 6 மாடிகள் இந்த கட்டிடத்தில் இருக்கும். 2026க்குள் கட்டுமானம் முடிக்கப்பட இருக்கிறது.
வேலூர் உள்ளளிட பகுதிகளில் இருக்கும் மினி டைடல் பார்க் போலவே திருவண்ணாமலையில் இந்த டைடல் பார்க் சிறப்பான வசதிகளுடன் அமைய இருக்கிறது. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐடி துறையில் திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் இருக்கும் நிலையில் இனி அவர்கள் ஐடி வேலையை தேடி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வது குறையும். மேலும் ஏற்கனவே வேலூர் பகுதியில் டைடல் பார்க் அமைய இருக்கும் நிலையில், திருவண்ணாமலையிலும் டைடல் பார்க் அமையவிருப்பதால், கூடுதலாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications