சூறையாடிய மாண்டஸ்..தவிக்கும் மக்கள்.. திருவண்ணாமலையில் 25 செமீ மழை..எங்கெங்கு வெள்ளம்
திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த மாண்டஸ், மீண்டும் வலுவிழந்து புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மாமல்லபுரத்தில் 9ஆம் தேதி இரவு முதல் 10ஆம் தேதி காலை வரை கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலிருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது மாண்டஸ் புயல். நேற்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை சுமார் 3 மணிக்கு கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி அதிகாலை 3 மணியளவில் கரையை முழுவதுமாக கடக்கும் வரை அதி கனமழையும் சூறைக்காற்றும் நீடித்தது.
மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் காற்றால் பெயர்ந்து விழுந்தன. இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் சைக்கிளிங் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது.
300 மரங்கள் வேரோடு சாய்த்து.. 4 உயிர்களை பறித்த மாண்டஸ் பயணம் இப்போ எங்கே? லைவ் லொகேஷன் இதோ
வேரோடு சாய்ந்த மரங்கள்
புயலால் பலத்த காற்று வீசியதால், கடலோரப்பகுதிகளில் உள்ள பொருட்கள் தூக்கிவீசப்பட்டன. சாலையோர கடைகளில் இருந்த இரும்பு தகடுகள் பறந்தன. சென்னையில் மட்டும் 48 மரங்கள் வேரோடு சாய்ந்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. மேலும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வந்தபோது, வீசிய பலத்த காற்றால், பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஓஎம்ஆர் சாலையிலிருந்து ஈசிஆர் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ரயில் விமான சேவை பாதிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் கொண்ட 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னைக்கு வந்த 9 விமானங்கள் புயல் காரணமாக தரையிரங்கமுடியாமல், பெங்களூர் ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய புறநகர் ரயில்களும், மதுரை விழுப்புரம் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் இரவு நேர ரயில்களும் தற்காலிகமாக சில மணி நேரம் நிறுத்தப்பட்டன.
புயலின் தாக்கம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது. சென்னையில் இரவு இயக்கப்படும் மாநகராட்சி பேருந்துகளின் இரவு சேவை நிறுத்தப்பட்டன. சரியாக அதிகாலை 3 மணிக்கு மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு, சென்னை போக்குவரத்து சேவை மீண்டும் தொடரப்பட்டது.
எங்கெங்கு எவ்வளவு மழை
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீட்டரும், காஞ்சிபுரத்தில் 19 செ.மீ. செய்யாறு-18 செ.மீ., ஆவடி-17 செ.மீ., திருத்தணி, கே.வி.கே. காட்டுக்குப்பம் தலா 16 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை அயனாவரம் தாலுகா அலுவலகம், குன்றத்தூர் தலா 15 செ.மீ., அரக்கோனம், உத்திரமேரூர், பெரம்பூர் பகுதிகளில் தலா 14 செ.மீ., கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், சோழவரம், பள்ளிப்பட்டு, எம்.ஜி.ஆர். நகர் ஆலந்தூர், ஊத்துக்கோட்டை தலா 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பத்தூர், செங்குன்றம், செங்கல்பட்டு, கொரட்டூர், சென்னை விமான நிலையம் தலா 12 செ.மீ., திருவள்ளூர், பொன்னேரி, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை, காவேரிப்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி தலா 11 செ.மீ., மீனம்பாக்கம், திருத்தணி, புழல், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைபாக்கம், சின்னகலர் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.