19,000 கருக்கலைப்பு.. திருவண்ணாமலையை கலக்கிய போலி டாக்டர் ஆனந்திக்கு குண்டாஸ்!
குண்டர் சட்டத்தில் தி.மலை போலி டாக்டர் ஆனந்தி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை: 10 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்களை அழித்து சிதைத்த டுபாக்குர் பெண் டாக்டர் ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தவர்தான் ஆனந்தி. படித்தது வெறும் பிளஸ் 2தான்.
இந்த மாத துவக்கத்தில், போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் அந்த மையம் ஆய்வு செய்யப்பட்டதில், அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கணவன் உடந்தை
அப்போதுதான், இந்த ஆனந்தி, ஏற்கனவே 2 முறை இதே போல பெண்களுக்கு அபார்ஷன் செய்த குற்றத்துக்காக கைதானவர் என்பது தெரிந்தது. இதையடுத்து இவருக்கு உடந்தையாக கணவன் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவகுமார் ஆகியோரை வளைத்து பிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
19 ஆயிரம் சிசுக்கள்
விசாரணையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஆனந்தி ஈடுபட்டதும், இவரால் 19 ஆயிரம் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
சொத்துக்கள் முடக்கம்
இதையடுத்து, ஆனந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டு, அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன.
பாய்ந்தது குண்டர் சட்டம்
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏற்கனவே பலமுறை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டும், தொடர்ந்து சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தி பரிந்துரையின்பேரில் கலெக்டர் கந்தசாமி இந்த உத்தரவினை பிறப்பித்தார்.