பொண்டாட்டி 25 வருஷமா சோறு போடல.. ரூ 4 கோடி சொத்தும் அம்மனுக்கு தான் சேரனும்! ஓய்வுபெற்ற ராணுவ வீரர்
திருவண்ணாமலை: தன் இரண்டு மகள்களும் என்னை அப்பா இல்லை என்று சொல்லிட்டாங்க.. என்னை அடிப்பதற்கு ஆட்களோடு வந்தாங்க.. கட்டுன பொண்டாட்டியும் 25 வருஷமா சோறு போடல.. இதனால் தான் நான் சம்பாதித்த ரூ.4 கோடி மதிப்பிலான இரண்டு வீடுகளையும் கோவிலுக்கு எழுதி வைப்பதற்காக கோவில் உண்டியலில் போட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் உறுதியாக இந்த சொத்துக்கள் கோவிலுக்கு தான் சொந்தமாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி. இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து
இந்த நிலையில் கடந்த கடந்த மே மாதம் 2 ஆம் தேதி கண்ணமங்கலம் பகுதியில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு விஜயன் சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் உண்டியலில் சொத்து பத்திரங்களை போட்டுள்ளார். ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்களை உண்டியலில் போட்டு சென்றுள்ளார். தொடர்ந்து கோவில் நிர்வாகத்திடம் இதுபற்றி தெரிவித்து இருக்கிறார்.
இன்று உண்டியல் பணத்தை எண்ணும்போது அந்த பத்திரங்களை கோவில் நிர்வாகத்தினர் எடுத்துள்ளனர். மேலும் இந்த தகவல் அறிந்து விஜயனும் கோவிலுக்கு வந்துள்ளார். ஊர் மக்களும் விஜயன் ரூ.4 கோடி சொத்துகளை எழுதி வைத்திருப்பதாக அறிந்த தகவல் கேட்டு அங்கு கூடினர். அப்போது உறுதியாக இந்த சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைப்பதாக விஜயன் உறுதியளித்தார்.
ஆட்களோடு அடிப்பதற்கு வந்தாங்க
என் மகள்களே என்னை அப்பா இல்லை என்று சொல்லிவிட்டதாலும் என்னை அடிப்பதற்கு ஆட்களை கூப்பிட்டு வந்தனர் என்றும், என் பரம்பரைக்கு அம்மன் அருள் வேண்டும் என்பதாலும் இந்த சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைப்பதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி விஜயன் கூறியதாவது:- ஒரு நாள் என் இரு மகள்களும் அடி ஆட்களோடு என்னை அடிப்பதற்காக வீட்டுக்கு வந்தனர். அப்போது ஒரு மகள் என்னுடைய பொருட்களை எல்லாம் கொடுங்க என்று சொன்னார்.
நானும் எடுத்துக்கோம்மா.. என்று சொன்னேன்.. அதற்கு ஏன் இப்படி ஆட்களை கூப்பிட்டுக்கொண்டு வந்துருக்கிறாய் என்றேன்.. அப்போது நீ ராணுவ வீரர் தானே.. வந்து சண்டை போடு என்று சொன்னார். நான் வயதாகிவிட்டதம்மா என்றேன்.. அப்போ என்னோடு சண்டை போடு என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் என்ன வேண்டுமோ எடுத்து செல்லுங்கள் என்றேன். இன்னொரு மகளும் என்னை அப்பா இல்லை என்று சொல்லிவிட்டார்.
அம்மன் அருள் வேண்டும்
மனைவியும் 25 வருஷமாக சோறு போடவில்லை.. மகள்கள் இருவரும் அப்பா இல்லை என கூறிவிட்டனர். அப்போதே என் மனதில் நினைத்துவிட்டேன் அப்பா இல்லை என்று சொன்ன மகள்களுக்கு நான் ஏன் சொத்துக்களை கொடுக்க வேண்டும் என்று.. என் பரம்பரைக்கு அம்மன் அருள் வேண்டும் என்பதற்காக நான் இந்த சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைக்கிறேன். நான் சம்பாதித்த சொத்து.. பரம்பரை சொத்து கிடையாது. டெல்லியில் இருந்து வந்ததும் நான் தான் கட்டினேன்.
கண்ணமங்கலம் பகுதியில் 10 சென்ட் இடத்தில் 2 மாடி வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடி.. இதேபோல் மற்றொரு பகுதியில் 1500 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடும் உள்ளது. இந்த 2 வீடுகளையும் தான் கோவிலுக்கு என் கைப்பட எழுதி கொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications