இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப்படுகொலை.. நீடாமங்கலத்தில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் நடேச தமிழார்வன் (48). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கட்சி பணி மட்டுமின்றி, பொதுமக்களின் பல்வேறு பொது பிரச்சனைகளுக்காக போராட்ட களத்தில் குரல் கொடுத்து கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரிடம் நன்மதிப்பை பெற்றவர்.

ரவுடி மீது புகார்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைவீதியில் பூவனூர் கிராமத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞர் இருவரை கடுமையாக தாக்கி நிர்வாணப்படுத்தி ரவுடித்தனம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அவ்வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த நடேச தமிழார்வன் தட்டி கேட்டதோடு ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

நடேச தமிழார்வன்
ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நீடாமங்கலம் காவல்துறையினர் கஞ்சா வியாபாரி ரவுடி ராஜ்குமாரிடம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இன்று மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது பைக்கை இடைமறித்து நடேச தமிழார்வனை கீழே தள்ளினார்கள்.

வெட்டி படுகொலை
பின்னர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் நடேச தமிழார்வன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நீடாமங்கலம் காவல்துறையினர் நடேச தமிழார்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பதற்றமான சூழ்நிலை
இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றமான சூழ்நிலையினை அடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications