அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அவ்வளவுதான்.. ”நாவடக்கத்துடன் பேச வேண்டும்” அட்வைஸ் செய்த பாலகிருஷ்ணன்!
திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனை கடந்து 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். ஆனால் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாக கொண்டிருக்கும் நாடு, உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என கதைவிடுவது மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்தார்.

இலவச விவாதம்
தொடர்ந்து இலவசங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் மத்திய அரசை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி கேட்கிறார். இலவசங்களை குறைத்து கார்ப்பரேட்களை வளர்ச்சியடைய வைக்கும் மத்திய அரசு, சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என கூறுவது குறித்து கேள்வி எழுப்பினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.

அண்ணாமலை மீது விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. அண்ணாமலை திமுக நிதியமைச்சரை விமர்சிப்பது அநாகரிகமாக உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினிசாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்கும் நோக்கில் இலவசங்கள் தேவை என வலியுறுத்தும் தமிழக நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடியின் சாதனை
அதேபோல் பத்தே முக்கால் லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் எதற்கு என்று கேள்வி கேட்கிறார். அதனால் தான் உலகிலயே 3வது பணக்காரராக இந்தியர் ஒருவர் இருக்கிறார். அதானி உலக பணக்காரராக வந்திருப்பது என்பது தான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனை என்று தெரிவித்தார்.

ரேஷன் கடை
அதேபோல் தெலங்கானா ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விவகாரம் குறித்து கருத்து கூறுகையில், ரேஷன் கடையில் பிரதமர் படத்தை வைப்பது அவசியமற்றது. மோடி என்பது ஒரு வழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார். மோடி பேசிக்கொண்டே இருப்பார். நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆவேசமாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications