சொந்த வீடு கட்ட ஆசைப்பட்டது தப்பா சார்... உயிரைக்குடித்த லஞ்சம் - நன்னிலம் அதிகாரி சஸ்பெண்ட்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
திருவாரூர்: கஷ்டப்பட்டு கடனை வாங்கி வீடு கட்டியும் அந்த வீட்டில் வசிக்க முடியாத அளவிற்கு இளைஞரின் உயிரை காவு வாங்கியுள்ளது ரூ.18 ஆயிரம் லஞ்சம். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த இளைஞருக்கு தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டு உயிரை குடித்த நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் பெயர் மணிகண்டன் என்பதாகும். வயது 30, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.
கட்டிடத்தொழிலாளியான இவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக இவர் இவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான தொகை ரூ.2.70 லட்சம், 6 தவணைகளாக விடுவிக்கப்படும்.
சொந்த வீடு
இவருக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர்.அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடன் பெற்று கொடுத்துள்ளார்.
பணம் விடுவிக்க லஞ்சம்
அதேபோல கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன் இரண்டாவது தவணைக்கான பணம் விடுவிக்க வேண்டும். ஆனால் பணத்தை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டார் மகேஸ்வரன். இதனால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ 15ஆயிரம் கொடுத்துள்ளார்.
விஷம் குடித்த மணிகண்டன்
லஞ்சமாக பணம் கொடுத்து இரண்டாவது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்பு கொண்டபோது சரியான பதில் சொல்லவில்லையாம். மேலே கான்கிரீட் போட்ட பின்னர் பணத்தை விடுவிப்பதாக கூறினாராம் மகேஸ்வரன். மூன்று தவணை பணம் கொடுக்க வேண்டிய அளவிற்கு வேலை முடித்தும் பணம் வரவில்லை இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் குடித்து விட்டு தனது மனக்குமுறலை வீடியோவாக பதிவு செய்து சமுக வலத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
மணிகண்டன் உயிரிழப்பு
ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மகேஸ்வரன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து, மணிகண்டனின் உறவினர்கள் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சஸ்பெண்ட்
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதை அடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் லஞ்சம் கேட்ட ஓவர்சார் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மகேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கொதிப்பு
இந்நிலையில், கொல்லு மாங்குடியில் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் அரசு அதிகாரிகள் அவர்களது பணிகளை செய்வதற்கு பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததே மணிகண்டனின் உயிர் போவதற்கு காரணமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அதிகாரி ஒருவரின் பண பேராசையால் கணவனை இழந்து தவிக்கும் மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.