’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா போலீசிடம் ஆவேசம்
திருப்பதி: ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் அமானுஷ்யங்களை நம்பி இரண்டு மகள்களை கொன்று நரபலி கொடுத்த பேராசிரியை பத்மஜா, தான் சிவனின் அவதாரம் என்றும் , கழுத்தில் விஷம் உள்ளதாகவும் கூறி கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இவரது செயல்களை கண்டு போலீசார் ஆடிப்போய் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவநகரில் வசித்து வந்தவர் புருஷோத்தம் நாயுடு. இவரது மனைவி பத்மஜா . புருஷோத்தம் நாயுடு அரசு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவருவரும் படிப்பில் உச்சம் தொட்டவர்கள் என்றாலும் மூடநம்பிக்கைகளில் அதீத ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளனர்.
புருஷோத்தம் - பத்மஜா தம்பதிக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் அலேக்யா (27) மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் 8மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி இருந்தனர்.
வலிப்பு நோய்
இவர்கள் பூஜை செய்தால் அற்புத பலன்கள் பெறலாம் என்ற அதீத நம்பிக்கையில் கடந்த சிலமாதங்களாக பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் புருஷோத்தமனின் மனைவிக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. அதை குணப்படுத்த இரண்டு பெண்களை நரபலி கொடுத்தால் சரி செய்துவிடலாம். குழந்தைகள் மீண்டும் உயிருடன் வந்துவிடும் என்று கூறிய சாமியாரின் பேச்சை கேட்டு ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி இருந்துள்ளனர். சாய் திவ்யா, அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து நிர்வாணப்படுத்தி பூஜை செய்திருக்கிறார்கள்.
கொலை செய்தது உறுதி
இதற்கிடையே வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அதிர்ச்சி அடைந்தார். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்ததை உறுதி செய்தார்.
நம்பிய பெற்றோர்
எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், போலீசார் மற்றும் உறவினர்களை கூட அவர்கள் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்து இருக்கிறார்கள். தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று போலீசிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்துபோலீசார் தங்கள் பாணியில் விசாணையில் இறங்கி. வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறையில் அடைப்பு
புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளிகளான புருஷோத்தம் நாயுடு - பத்மஜா இருவரும், மதனபள்ளி சப்- ஜெயிலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா பரிசோதனை
நீதிமன்றக் காவலுக்கு முன்னதாக, புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்ற போலீசாரிடம், விநோதமாகவும் ஒத்துழைக்காமலும் பத்மஜா, "நான் சிவனின் அவதாரம். என் கழுத்தில் விஷம் உள்ளது. அதனால் நான் ஏற்கனவே கொரோனாவை அகற்றிவிட்டேன். சிவன் திரும்பி வந்துவிட்டார். நான்தான் சிவன்" என்று கூச்சலிட்டுள்ளார்.. அதன்பிறகு போலீஸ் வேனிலேயே அமரவைத்து, கொரோனா பரிசோதனைக்காக throat swab-ஐ மருத்துவர்கள் எடுத்துள்ளனர். இந்த தகவலை மதனபள்ளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு கூறியுள்ளார். இதனிடையே மகள்களை தேவையில்லாமல் கொன்றுவிட்டதாக இருவரும் தற்போது வேதனையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.