சட்டசபை தேர்தல் வெற்றி... திருப்பதியில் ஏழுமலையானுக்கு நன்றி சொன்ன துர்கா ஸ்டாலின்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா, தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். ஆடி அமாவாசையை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதல்வரின் இல்லத்திற்கு வந்து ஆலயத்தின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்தனர்.

கோவிலுக்கு வர அழைப்பு
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். அப்போதே கோவிலுக்கு வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துச்சென்றனர்.

துர்கா ஸ்டாலின் திருப்பதி தரிசனம்
கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார் துர்கா. அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் கோவில் பிரசாதங்களையும் பட்டு வஸ்திரத்தையும் வழங்கினர்.

திருச்சானூரில் தரிசனம்
திருப்பதியில் துர்காவிடமும் அங்கிருந்த பக்தர்கள் முகக்கவசத்தை கழற்றி புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் துர்கா. தொடர்ந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் சாமி தரிசனம்
சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் சென்று வேண்டுதல் வைத்திருந்தார் துர்கா ஸ்டாலின். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிக்கொண்டார். திருச்செந்தூர் முதல் திருவள்ளூர் வரையிலும் உள்ள ஆலயங்களில் இறைவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார் துர்கா.

வேண்டுதல் வைத்த துர்கா
பெருமாள் கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தை அமாவாசையில் நடைபெறும் திருநாங்கூர் ஆலயங்களில் நடைபெறும் 11 கருடசேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார் துர்கா ஸ்டாலின். அதே போல 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதுமாகும். நெல்லை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவார் துர்கா ஸ்டாலின்.

இறைவனுக்கு நன்றி
தன்னுடைய கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற நேர்த்திக்கடன் நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் துர்கா ஸ்டாலின் தற்போது கொரோனா தளர்வுகள் அமலில் உள்ள போதே கோவில்களுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி சொல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications